Salem: தந்தை மீது மகன் கொடூர தாக்குதல் .. காரணத்தை கேட்டு மிரண்ட மக்கள்!
சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த 70 வயதான செல்வகுமார், இரண்டாவது திருமணத்திற்கு விளம்பரம் கொடுத்ததால், அவரது மூத்த மகன் தமிழழகன், தந்தையை கடுமையாகத் தாக்கினார். மனைவியின் மரணத்திற்குப் பின்னர் மறுமணம் செய்ய விரும்பிய செல்வகுமாரின் முயற்சி, மகனின் கோபத்திற்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரமங்கலம், ஜூன் 6: சேலத்தில் மகனுக்கு பெண் தேடாமல் தனக்கு மணப்பெண் தேடிய தந்தையை மகன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு கனவாகவே உள்ளது. அப்படிப்பட்ட நாள் எப்போது வரும் என இளம் வயதினர் காத்திருக்கின்றனர். அதேசமயம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் எடுத்த பிறகு தங்களது துணையை இழந்த ஆண் அல்லது பெண் மறுமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது. இதன் காரணம் என்னவென்று கேட்டால் துணை இல்லாத பிரிவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என கூறுவார்கள். இப்படியான நிலையில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அமைந்துள்ளது.
2வது மனைவி தேடிய தந்தை
அதாவது அங்குள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியில் சேர்ந்தவர் செல்வகுமார். 70 வயதான இவர் வன ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், தமிழழகன் மற்றும் கிரி வெங்கடேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். மனைவி சண்முக வள்ளிக்கு மனநல பாதிப்பு இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படியான நிலையில் தமிழழகன் பி.காம் வரை படித்துவிட்டு கொண்டலாம்பட்டி பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இரண்டாவது மகனான கிரி வெங்கடேஷ் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். செல்வகுமார் தனது இரு மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வகுமார் நாளிதழ்களில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு மணப்பெண் வேண்டி விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மூத்த மகன் தமிழழகன் தந்தையுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் தனக்கு முதலில் திருமணம் செய்து வைத்து விட்டு அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் செல்வகுமார் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில் ஆத்திரமடைந்த தமிழழகன் வீட்டிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து செல்வகுமாரின் தலையில் அடித்துள்ளார். ஆனாலும் கோபம் தீராத அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை எனக் கூட பார்க்காமல் செல்வகுமாரின் கழுத்தையும் அறுத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் செல்வகுமார் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையுடன் மருத்துவமனைக்கு தமிழழகனும் வந்தார். தற்போது செல்வகுமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் வந்த சூரமங்கலம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் தமிழழகனை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது தனது தந்தை அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், 70 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு விளம்பரம் செய்ததால் கோபமாக இருந்ததாகவும் தமிழழகன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தந்தையை தாக்கிய தமிழழகனை போலீசார் கைது செய்தனர்.