ஆட்சிக்கு வந்தால்.. “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000”.. அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள் இதோ!!

AIADMK election promise: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தால்.. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000.. அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள் இதோ!!

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000"

Updated On: 

24 Feb 2026 13:12 PM

 IST

சென்னை, பிப்ரவரி 24: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் குடும்ப சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அதிமுகவின் மூன்றாம் கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இரண்டு கட்டங்களாக அதிமுக வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதன்படி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.1,200-இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மாணவர்களின் வங்கிக் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..

மகளிர் உதவித்தொகை ரூ.2,000:

அதோடு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமான வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் உதவித் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லை, கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் சார்பில் நிலம், நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் என பல்வேறு கண்கவர் வாக்குறுதிகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் 3வது கட்ட வாக்குறுதிகள்:

இந்நிலையில், இன்று அதிமுகவின் 3வது கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் நாட்டில் 17வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழக மக்களின் பேரன்பைப் பெற்று, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்.

  • ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.
  • வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
  • மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து 1,000 ரூபாய் வழங்கப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும்; விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
  • நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 90 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு வலுக்கும் எதிர்ப்பு
கேமராவில் சிக்கிய அரிய வகை ஃபயர் டைகர் - அப்படி என்ன ஸ்பெஷல்?
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி