பங்கு சந்தை வர்த்தகத்தில் இரட்டிப்பு லாபம்…மர்மநபர் வீசிய வலை..ரூ.6 லட்சத்தை இழந்த நபர்!
Stock Market Trading Fraud: திருநெல்வேலி மாவட்டத்தில் பங்கு சந்தை வர்த்தகத்தில் குறைந்த முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று வாட்ஸ் ஆப்பில் மர்மநபர் கூறியதை நம்பிய நபர் ரூ. 6 லட்சத்தை இழந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையில் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.6 லட்சம் மோசடி
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா பகுதியை சேர்ந்த நபரின் செல்போன் வாட்ஸ் ஆப்புக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் வீட்டில் இருந்தபடியே பங்கு சந்தையில் வணிகம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய அந்த நபர், மர்மநபர் கூறியபடி செய்துள்ளார். அதன்படி, அந்த மர்ம நபர் போலியான கணக்கை அவரது பெயரில் தொடங்கி ஆரம்பத்தில் லாபம் கிடைத்தது போல ஆசை வார்த்தை கூறி பணத்தை முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். அதன்படி, அந்த நபரும் முதலில் முதலீட்டு தொகையை செலுத்தியுள்ளார். பின்னர், அந்த போலியான வெப்சைட்டில் அதற்கான இரட்டிப்பு தொகை காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தொகையை எடுக்காத வகையில் லாக் செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சம் மோசடி
இதற்கு, மேலும் தொகை முதலீடு செய்தால் அந்த லாபத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. இவ்வாறாக, அந்த நபரிடம் பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சம் வரை அந்த மர்ம நபர் பெற்றதாக தெரிகிறது. இதன் பின்னர், இந்த லாப தொகையை அவரால் பெற முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நபர், தான் செலுத்திய முதலீட்டு தொகையை பெற முயற்சி செய்தார். ஆனால், அந்த தொகையையும் அவரால் பெற முடியவில்லை. இதனால், அந்த மர்ம நபரின் செல்போன் என்னை தொடர்பு கொண்ட போது, அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – மேலும் ஒருவர் கைது – பரபரப்பு தகவல்
சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த நபர் திருநெல்வேலி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு இரட்டிப்பு லாபம் பெறலாம் என கூறி ரூ.6 வரை மர்ம நபர்கள் மோசடி செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், தமிழகத்தில் தற்போது பங்கு சந்தை வர்த்தகம் என்ற பெயரில் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
இதில், பொதுமக்கள் பலர் இரட்டிப்பு லாபத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். எனவே பங்கு சந்தை வணிகம் என்ற பெயரில் மர்ம நபர்களிடம் பணத்தை இழந்து ஏமாற வேண்டாம். இது போன்ற மெசேஜ்கள் தங்களுக்கு வந்தால், இது தொடர்பாக www.cybercrime.gov.in என்ற இணையவழி குற்ற தடுப்பு பிரிவு இணையதளத்திலும், 1930 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த கணவன்.. பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டர் அழுத்தியதால் தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்!