“பவர் உங்கள் கையில்.. பவர் கட் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்”.. முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!
Power Outage Issue: "மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்து இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அரசு தங்களது நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் இனி 'மின்தடை இல்லாத நிலை'யை உருவாக்க வேண்டும். இதற்காக உறுதியான மற்றும் நிரந்தரமான செயல் திட்டங்களை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் அண்மைகாலமாக நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனைக்கு எதிராக திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. கோடைக்காலத்தில் ஏற்படும் இந்த தொடர் மின்வெட்டால் சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்தவகையில், மின்வெட்டு விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள முன்னாள் அமைச்சர் சிவசங்கர், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க : திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் முறைகேடு – நடந்தது என்ன?
பவர் உங்கள் கையில்:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மக்கள் உங்கள் கையில் பவரை (அதிகாரத்தை) கொடுத்துவிட்டார்கள். இனி பவர் கட் (மின்வெட்டு) இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் உங்களின் வேலை. அதற்கு என்ன வழி என்று அரசு யோசிக்க வேண்டும்” என்றார். மேலும், தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இந்தியாவிலேயே மிகச் சிறந்தவர்கள் என்றும், எந்தவொரு மின்பிரச்சனையையும் எப்படிச் சரிசெய்வது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் குரலா?
எனவே, முதலமைச்சரும் அமைச்சர்களும் அந்த அதிகாரிகளை அழைத்து முறையான ஆய்வுக்கூட்டம் நடத்திப் பேசினாலே மக்களுக்குச் சிரமம் தராமல் மின் விநியோகத்தை சீரமைக்க முடியும் என்றும், ஆனால் தற்போதைய அரசு ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு மத்திய அரசின் குரலாக ஒலிப்பது போலத் தோன்றுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
மின்வெட்டு ஏற்றுக்கொள்ள முடியாது:
தொடர் மின்வெட்டுக்கு உடனடி மற்றும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் வலியுறுத்திள்ளார். இந்த கடுமையான கோடைக்காலத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் நள்ளிரவிலும் பகலிலும் பெரிதும் பாதிக்கப்படுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : மின்மினி தீவாய் மாறிய ஏழைகளின் ஊட்டி.. ஏற்காட்டில் கோடை விழா கோலாகல தொடக்கம்!
உறுதியான செயல் திட்டம் தேவை:
“மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்து இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அரசு தங்களது நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் இனி ‘மின்தடை இல்லாத நிலை’யை உருவாக்க வேண்டும். இதற்காக உறுதியான மற்றும் நிரந்தரமான செயல் திட்டங்களை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இனி மின்வெட்டு காரணமாக மக்கள் அவதிப்படாத வகையில் செயல்படுவது அரசின் கடமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் இந்த திடீர் மின் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு பிரச்சனை அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.