சென்னையில் பயங்கரம்.. காதல் ஜோடியை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட காவலர்.. இளம்பெண்ணின் துணிச்சலால் கைது..
Shocking Incident in Chennai: மாணவன் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அந்த மாணவியைக் கைவிட்ட காவலர், மாணவன் கொண்டு வந்த ரூ.8,000 பணத்தைப் பறித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பினார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஜோடி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை ஓரத்தில், இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு காரில் அமர்ந்து இளம் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவனும், மாணவியும் ஆவார்கள். இதனிடையே, அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், காருக்குள் இருந்து ஜோடியை மிரட்டும் வகையில் விசாரணை செய்யத் தொடங்கினார். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்யப்போவதாகக் கூறி அச்சமுறுத்திய அவர், வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் ரூ.10,000 தர வேண்டும் என்று பேரம் பேசினார். தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று அந்த இளம் ஜோடிகள் கூறியதைத் தொடர்ந்து, அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுத்துத் தருமாறு அந்த காவலர் வற்புறுத்தினார்.
இதையும் படிக்க: வாட்டி வதைக்கும் வெயில்.. வேலூரில் பதிவான 42 டிகிரி செல்சியஸ் வெயில்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
மாணவியிடம் அத்துமீறிய காவலர்:
இதையடுத்து, காதலர்களின் காரிலேயே ஏடிஎம் மையத்திற்குச் சென்ற அவர், மாணவியைக் காரினுள்ளேயே இருக்கச் செய்துவிட்டு, மாணவனை மட்டும் பணம் எடுத்து வர அனுப்பினார். மாணவன் ரூ.8,000 பணத்துடன் திரும்பி வந்தபோது, காரினுள்ளே காவலர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பணத்துடன் காவலர் தப்பியோட்டம்:
மாணவன் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அந்த மாணவியைக் கைவிட்ட காவலர், மாணவன் கொண்டு வந்த ரூ.8,000 பணத்தைப் பறித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பினார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் துணிச்சலாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குற்றவாளி கைது மற்றும் பின்னணி:
போலீசாரின் விசாரணையில், இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 35 வயதான ஜோசப் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் தனிப்பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வந்தவர். தலைமறைவாக இருந்த ஜோசப்பை நேற்று கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். மேலும், இவர் இதற்கு முன்பும் இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஆக்கப்பொறுத்தவர்கள், ஆறப்பொறுங்கள்.. 10 இடங்களிலும் தேமுதிக வெற்றிப்பெறும் – பிரேமலதா விஜயகாந்த்..