சென்னை, ஏப்ரல் 30, 2026: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக “சிங்கார சென்னை அட்டை”யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், மே 1ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டை”க்கு முழுமையாக மாற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மெட்ரோ ரயில் பயண அட்டை நாளை முதல் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில், சென்னைவாசிகளின் முக்கியமான போக்குவரத்து வசதியாக மாறியுள்ளது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
நாளை முதல் சிங்கார சென்னை அட்டைக்கு மாறும் மெட்ரோ:
இந்த நிலையில், நாளை முதல் “சிங்கார சென்னை அட்டை” மட்டுமே செல்லுபடியாகும் என்றும், பழைய மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாறிக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 14.04.2023 முதல் “சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)”யை அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க: ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. ஒரு பக்கம் கொட்டும் மழை.. எந்த ஊரில் எப்படி இருக்கும்?
இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)”க்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
பழைய அட்டையை என்ன செய்ய வேண்டும்?
எனவே, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் உள்ள மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.