Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாமகவில் வலுக்கும் தந்தை மகன் மோதல்.. சமாதான பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு அழைப்பு விடுத்த எம்.எல்.ஏ அருள்..

Pmk Internal Clash: பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமதாஸுக்கும், ராமதாஸுக்கும் இடையே மோதல் வலுவடைந்து வரும் நிலையில், அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள், ராமதாஸை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த அன்புமணி முன்வர வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாமகவில் வலுக்கும் தந்தை மகன் மோதல்.. சமாதான பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு அழைப்பு விடுத்த எம்.எல்.ஏ அருள்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 29 Jun 2025 18:27 PM

சென்னை, ஜூன் 29, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே இருக்கக்கூடிய மோதல் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்கதையாகி வருகிறது. தினசரி இருவரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இரண்டு பேருமே தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜூன் 29, 2025 தேதியான இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக சமூக ஊடக பேரவை ஆலோசனைக் கூட்டம் ஆனது நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லியும் மருமகள் அரசியலுக்கு வந்தது எனக்கு பிடிக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்தார்.

எதிரும் புதிருமாக மாறிய தந்தை மகன்:

இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசிய அன்புமணி ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ராமதாஸின் சம்மதத்துடன் தான் என தெரிவித்தார். அதேப்போல் கடந்த ஐந்து வருட காலங்களாக கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர் அவராகவே இல்லை என்றும் குழந்தை போல் மாறிவிட்டதாகவும் அவரை மூன்று தீய சக்திகள் இயக்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

இப்படி பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கக்கூடிய பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஜூன் 29ஆம் தேதி ஆன இன்று கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சமூக ஊடகப்பிரிவு ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து ராமதாஸ் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – எம்.எல்.ஏ அருள்:

இந்நிலையில், சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் ஜூன் 29 2025-ம் தேதியான இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “ ஐயா ஐயாவாக இல்லை குழந்தை போல் மாறிவிட்டார், மூன்று தீய சக்திகள் அவரை இயக்குகிறது என ராமதாஸ் சொல்லி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கட்சி நிறுவனர் ராமதாசை அன்புமணி விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் குழந்தை போல் மாறிவிட்டார் என சொன்ன நிலையில், அவருக்கு கட்சியின் தலைவர் பதவியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியது ராமதாஸ் தான். அது மட்டும் எப்படி செல்லுபடியாகும்” என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “ பிறர் சொல்வதைக் கேட்காமல் தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து பேசி சமாதானம் ஆக வேண்டும். 2026 இல் கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் நீங்கள் தான் எதிர்காலத்தில் கட்சியின் தலைவராக இருப்பீர்கள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சிலரின் பேச்சைக் கேட்டு ராமதாஸிடம் இருந்து கட்சியை பிடுங்கி விடலாம் என்று எண்ணாமல் சமாதானம் பேச வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்