பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் டெல்லி பயணம்.. தேர்தல் ஆணையத்தை அணுக திட்டம்..
PMK Leader Anbumani Ramadoss Delhi Visit: பாட்டாளி மக்கள் கட்சியில் முழு அதிகாரம் தன்னிடமே உள்ளது என அன்புமணி பேசியிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்வதற்காக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்த அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 29, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே தந்தை மகன் சண்டை முற்றியுள்ள நிலையில் நாளுக்கு நாள் இருவருமே மாற்றி மாற்றி விமர்சித்து வருகின்றனர். பாமகவில் முழு அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது என அன்புமணி பேசியிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்து, நாளுக்கு நாள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே இருக்கக்கூடிய மோதல் வலுவடைந்து வருகிறது.
இரு அணிகளாக பிரிந்து செயல்படும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்:
இரண்டு பேருமே தனித்தனியாக கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்சி நிறுவனர் ராமதாஸ் கடைசி மூச்சு இருக்கும் வரை கட்சியின் அனைத்து பொறுப்புமே தனக்கு தான் என கூறியிருந்த நிலையில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். அதாவது 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ன செய்வது என்பது தொடர்பாக தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை தனியாகவே நடத்தி வருகிறார். இவர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணியோ அல்லது அவரது ஆதரவாளர்களோ கலந்து கொள்வதில்லை.
இது ஒரு பக்கம் இருக்க கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மாவட்டம் தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்தி வந்தார். இதில் அவருக்கு திரளான ஆதரவு கிடைத்தது. அவர் தரப்பில் கட்சியின் முழு அதிகாரத்தை தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் அன்புமணி பேசுகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமதாஸ் அவர் அவராக இல்லை எனவும் குழந்தையாக மாறி உள்ளார் என்றும் அவர்களை மூன்று தீய சக்திகள் இயக்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ராமதாஸ் தரப்பில் அன்புமணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக தனக்கு தெரியாது என்றும் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
டெல்லி பயணம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ்:
இப்படி இருவருமே மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் அன்புமணி ராமதாஸ் தற்போது டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முழு அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாக கூறிய நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள அவர் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தந்தை மகன் இடையே இருந்த பிரச்சனையை ஒரு படி மேலே சென்று, அன்புமணி ராமதாஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சியை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.