கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மோடி.. பலத்த பாதுகாப்பு!
PM Modi Visit Gangaikonda Cholapuram : திருச்சியில் இருந்து பிரதமர் மோடி அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். தனி ஹெலிகாப்டர் மூலம் 2025 ஜூலை 27ஆம் தேதியான காலை 11.30 மணியளவில் அரியலூருக்கு செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.

அரியலூர், ஜூலை 27 : இரண்டு நாள் பயணமாக 2025 ஜூலை 26ஆம் தேதியான நேற்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளார். தூத்துக்குடியில் இருந்து விமானம் இரவில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து 2025 ஜூலை 27ஆம் தேதியான இன்று அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு (PM Modi Gangaikonda Cholapuram Visit) வருகை தருகிறார். 2025 ஜூலை 26ஆம் தேதியான நேற்று இரவு 7.30 மணியளவில் பிரதமர் மோடி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்ததோடு, ரூ.4,900 கோடி மதிப்பில் ரயில் திட்டங்கள், சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார். அதை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் இரவு 10.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை அவருக்கு வரவேற்றனர்.
கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மோடி
தொடர்ந்து, அவர் கார் மூலம் தனது ஹோட்டலுக்கு சென்றனார். இதனை அடுத்து, பிரதமர் மோடி திருச்சியில் இருந்து அரியலூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அதற்கு முன்னதாக, திருச்சியில் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. 2025 ஜூலை 27ஆம் தேதியான இன்று ஹோட்டலில் இருந்து விமான நிலையம் செல்லும்போது, பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, விமான நிலையத்திற்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறார்.
அங்கு பொன்னேரி பகுதியில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் தரையிறங்க உள்ளார். அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஒரு கிலோ மீட்டர் உள்ளது. இதனால், அவர் ரோடு ஷோவும் நடத்த உள்ளார். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை அவர் பார்வையிடுகிறார்.
பின்னர், மத்திய கலாச்சார துறை சார்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அதில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் வெளியிடுகிறார்.
”எங்களின் பாக்கியமாகும்”
மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27…
— Narendra Modi (@narendramodi) July 26, 2025
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், ஜூலை 27 அன்று வெகு சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியமாகும். ஆடித் திருவாதிரை விழாவும் கொண்டாடப்படும்” என குறிப்பிட்டு இருந்தார். இதனால், அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டிரோன்கள் பறக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.