‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்த கருணாநிதி’ – முதல்வர் ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டிய பவன் கல்யாண்
Pawan Kalyan recalls Karunanidhi : தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்ததாகவும், எனவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆதரிக்க வேண்டும் எனவும் பேசினார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (Bharatiya Janata Party) சார்பில் சென்னையில் நடைபெற்ற ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த கருத்தரங்கில் ஆந்திராவின் துணை முதல்வரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் (Pawan Kalyan) கலந்துகொண்டு பேசினார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி (M.Karunanidhi) ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்ததாகவும், எனவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆதரிக்க வேண்டும் எனவும் பேசினார். அப்போது ஒரு நாடு ஒரே தேர்தல் என்பது வெறும் நிர்வாக மாற்றம் அல்ல, இது ஒரு முக்கியமான பொருளாதார சீர்திருத்தம். தேர்தல் செலவினங்கள் குறையும், நிர்வாக நேரம் சேமிக்கப்படும், வளர்ச்சி திட்டங்கள் தடையின்றி நடைபெறும். இது நாட்டின் வளர்ச்சிக்கான முக்கியமான படியாகும்” என்று பேசினார்.
கருணாநிதியின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டிய பவன் கல்யாண்
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 1971-ம் ஆண்டு ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வேண்டுமெனக் கோரியிருந்ததை பவன் கல்யாண் நினைவுகூர்ந்தார். மேலும் ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் கூட, ஒரே நேரத்தில் தேர்தல்கள் குறித்து அவர் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்று அவரது மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் இதற்கு எதிராகப் பேசுகிறார். இது வருத்தமளிக்கக் கூடியது” என்றார்.
மக்கள் நலப்பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்
தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் தேர்தல்கள் அரசு நிர்வாகத்தை பெரிதும் பாதிக்கின்றன. தொடர்ந்து தேர்தல் பயணங்களில் ஈடுபட வேண்டி இருப்பதால் அரசியல் கட்சிகள் மக்களுக்கான ஆட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. “நாம் வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டால், இந்த ஒருங்கிணைந்த தேர்தல் முறையை ஆதரிக்க வேண்டும்,” என்று பவன் கல்யாண் வலியுறுத்தினார்.




மாநில உரிமைகள் குறித்த கவலைக்கு பதில்
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்கு எதிரானது என கூறும் எதிர்க்கட்சிகளின் பேச்சை அவர் மறுத்தார். “நம் அரசியலமைப்பில் மாநில உரிமைகளுக்கு தனி சட்டங்கள் உள்ளன. மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ப பணிகளை கட்டப்படுத்தி செயல்பட முடியும். . மாநிலங்களின் தனித்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதுடன், தேசிய ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் விதமாக இதை அமல்படுத்தலாம்” என்றார். மேலும் “திருவள்ளுவர், பாரதி, எம்ஜிஆர்., சித்தர்கள், முருகன் ஆகியோர் எனது இன்ஸ்பிரேஷன. தமிழகம் எனது மனதில் இடம் பிடித்திருக்கிறது” எனக் கூறினார்.
இந்த நாடு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமானால், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்திய பவன் கல்யாண், தமிழக முதல்வர் ஸ்டாலின் இதை மறுபரிசீலனை செய்து, தனது தந்தையின் விருப்பங்களை நினைவுகூர வேண்டும் என்று பேசினார்.