ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..
Vaithilingam Joined in Dmk: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இது தொடர்பான பாஜகவின் முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. அதோடு, பாஜகவும் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை.
சென்னை, ஜனவரி 21: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம். இதையொட்டி, அண்ணா அறிவாலயம் சென்ற அவரை அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று சென்றார். முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி, சட்டப்பேரவையில் இன்று காலை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். தஞ்சாவூர் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வைத்திலிங்கம். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த இவர், அதிமுகவில் இருந்து நீக்கபட்டது முதல் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பயணித்து வந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக கூட்டணி அழைப்பு விடாத நிலையில், இன்று அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: தவெக தேர்தல் அறிக்கை குழு லிஸ்டில் பெயர் மிஸ்ஸிங்.. விஜய் மீது செங்கோட்டையன் அப்செட்?.. வெளியான விளக்கம்!!
4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம், 2001, 2006, 2011, 2021 என 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார். அதோடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 2001 மற்றும் 2006ல் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், 2011 மற்றும் 2016ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அண்மையில் நடந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் கூட, உணர்ச்சிவசமாக பேசியிருந்தார். குறிப்பாக, அதிமுக ஒன்றிணைய வேண்டும் இல்லையென்றால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறி மாபெரும் வெற்றி பெரும் என்றெல்லாம் கூறியிருந்தார்.
மனோஜ் பாண்டியனை தொடர்ந்து வைத்திலிங்கம்:
அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்றுகட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். தற்போது வைத்திலிங்கமும் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “நம்மை பிடிக்காத சிலரும் கூட்டணியில் இருப்பார்கள்”.. மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபர பேச்சு!!
அடுத்தடுத்து காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்:
அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்ஸுன் தீவிர ஆதரவாளராக இருந்த வழக்கறிஞரும், முன்னாள் எம்எல்ஏவுமான பழனி சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். மற்றொரு முன்னாள் எம்எல்ஏவான ஜேசிடி பிரபாகரன் அண்மையில் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இப்படி, அடுத்தடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்று கட்சிகளில் இணைந்து வரும் நிலையில், அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.