AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு.. இன்று மருந்தகங்கள் முழு அடைப்பு போராட்டம்!!

இந்திய அளவில் சுமார் 12.4 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 5,000 கடைகள் உட்பட, மாநிலம் முழுவதும் உரிமம் பெற்று இயங்கும் 42,000-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு.. இன்று மருந்தகங்கள் முழு அடைப்பு போராட்டம்!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 May 2026 07:25 AM IST

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கக் கோரி, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் இன்று மருந்து கடைகள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்திற்கு இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி மருந்து விற்பனையால் ஏற்படும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை முன்வைத்து, மின்-மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கையுடன் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. ஆளுநர் இன்று சென்னை வருகை.. யார் யாருக்கு வாய்ப்பு?

போராட்டத்திற்கான முக்கியக் காரணங்கள்:

இணையவழியில் கட்டுப்பாடின்றி மருந்துகள் விற்கப்படுவதால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளே இந்த போராட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. குறிப்பாக, முறையான மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், வலி நிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரைகளை இளைஞர்கள் ஆன்லைன் மூலம் எளிதாக வாங்கி அவற்றுக்கு அடிமையாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வருகிறது.

முன்வைக்கப்படும் கோரிக்கைகள்:

மேலும், ஆன்லைன் மருந்து விற்பனையில் நிலவும் முறையற்ற லாப வரம்புகளும், வாடிக்கையாளர்களைக் கவர வழங்கப்படும் மிக அதிகப்படியான தள்ளுபடிகளும் சந்தை சமநிலையைக் குலைக்கின்றன. இதோடு மட்டுமன்றி, ஆன்லைன் மூலம் போலி மருந்துகள் புழக்கத்தில் விடுவதைத் தடுக்கவும், மிக எளிதாக இணையத்தில் வாங்கப்படும் கருக்கலைப்பு மாத்திரைகளால் ஏற்படும் தேவையற்ற உயிரிழப்புகள் மற்றும் கலாசாரப் பிறழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டிய கட்டாயம் இப்போராட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 42,000 மருந்தகங்கள் அடைப்பு:

இந்திய அளவில் சுமார் 12.4 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் தங்களது கடைகளை அடைத்து இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 5,000 கடைகள் உட்பட, மாநிலம் முழுவதும் உரிமம் பெற்று இயங்கும் 42,000-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த மருந்து விநியோகச் சங்கிலியும் ஸ்தம்பித்துள்ளது. நேரடி மருந்தகங்களை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் எதிர்காலம் இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் கேள்விக்குறியாகி உள்ளதாகக் கூறும் சங்க நிர்வாகிகள், அரசு தங்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்தப் போராட்டம் அடுத்த கட்டமாக மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அவசர கால மாற்று ஏற்பாடுகள்:

அதேசமயம், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்படும் அவசர கால மருத்துவத் தேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது. நோயாளிகளுக்கான அவசர மருந்து சேவையை எவ்விதத் தடையுமின்றி உறுதி செய்யத் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் சார்பில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆங்காங்கே நியமிக்கப்பட்டுள்ளனர். மருந்து தேவைப்படும் பொதுமக்கள் இந்த ஆய்வாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான அவசர கால மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஷாக்.. அரசு அதிகாரியின் செயலா?

வழக்கம்போல் இயங்கும் மருந்தகங்கள்:

மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளின் உள்ளே செயல்படும் மருந்தகங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இவற்றுடன் சேர்த்து, மத்திய அரசின் ‘பிரதம மந்திரி மக்கள் மருந்தகங்கள்’ பெரும்பாலான இடங்களில் செயல்படுவதுடன், தமிழக கூட்டுறவுத்துறையின் கீழ் மானிய விலையில் தரமான மருந்துகளை வழங்கி வரும் ‘முதல்வர் மருந்தகங்கள்’ எவ்விதத் தடையுமின்றி வழக்கம்போலச் செயல்படும் என்று அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Follow Us