ஆன்லைன் வர்த்தகத்தில் பெரும் நஷ்டம்.. மகளுடன் ரயில் முன் பாய்ந்த நபர்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஆன்லைன் வியாபாரத்தில் 15 லட்சம் ரூபாய் நஷ்டமடைந்த நிலையில் கடன் பிரச்னையால் மனமுடைந்தார். இதனிடையே அவர், தனது 6 வயது மகள் ஜஸ்வந்திகாவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், மே 26: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது மகளுடன் தொழிலாளி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட உலகில் இது தொடர்பான ஏராளமான மோசடி சம்பவங்களும், ஏமாற்று நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் வாழ்க்கையை முடித்துகொள்ளும் விபரீதமான முடிவுக்கும் கூட பலரும் செல்கிறார்கள். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், தனது மனைவி வாணி மற்றும் மகள் 6 வயதான ஜஸ்வந்திகா ஆகிருடன் வசித்து வந்தார். திருவள்ளூர் – காக்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும் கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றி வந்த லோகநாதன் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
கடன் வாங்கியதால் வந்த நெருக்கடி
இத்தகைய தொழிலில் முதலீடு செய்வதற்காக லோகநாதன் தனக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வியாபாரம் சரியாக இல்லாததால் ஆன்லைன் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் லோகநாதன் பரிதவித்து வந்துள்ளார்.
விபரீத முடிவு எடுத்த லோகநாதன்
இந்த நிலையில் 2025 மே 24ஆம் தேதி இரவு மகள் ஜஸ்வந்திக்காவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று வருவதாக மனைவி வாணியிடம் தெரிவித்துவிட்டு லோகநாதன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் திரும்பி வரவில்லை. இதனால் பதறிப் போன வாணி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் இருவரையும் தேடினர். இந்த நிலையில் தான் புட்லூர் ரயில் நிலையம் அருகே இரு உடல்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.




சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் வாணி தனது கணவர் மற்றும் மகளைக் காணவில்லை என புகாரளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தந்தை மற்றும் மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரிய வந்தது.
இதனையடுத்து லோகநாதனின் மனைவி வாணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர் கதறி அழுவது அங்கு நின்ற அனைவரையும் கண்கலங்க வைத்தது. மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்ட லோகநாதன் அங்கு இருக்கும் கடையில் சாப்பிட்டு விட்டு ரயில் நிலையத்தில் வெகுநேரமாக அமர்ந்துள்ளார். பின்னர் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் மகள் ஜஸ்வந்த்திகாவுடன் லோகநாதன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஆன்லைன் வர்த்தகத்தில் லோகநாதன் முதலீடு செய்வதற்காக யார் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருந்தார்? எனவும், யாரும் அவரை மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)