போராட்டத்திற்கு அனுமதி கிடையாது.. திமுகவை அலறவிட்ட காவல்துறை.. சென்னையில் திடீர் பரபரப்பு!!
சூழ்நிலை கட்டுக்கடங்காமல் போவதைக் கவனித்த காவல்துறையினர், கூடுதல் போலீசாரை வரவழைத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி, திமுக மாணவர் அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைப் போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனங்களில் அடைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
சென்னை, ஜுன் 29: அமைச்சர் சரத்குமாரைக் கண்டித்து சென்னையில் இன்று போராட்டம் நடத்த முயன்ற திமுக மாணவர் அணியினரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை மற்றும் பந்தல்களை போலீசார் தடியடி நடத்தாமல், அதிரடியாகப் பிடுங்கி அப்புறப்படுத்தியதால் சென்னை எழும்பூர் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. தமிழக அரசில் அமைச்சராக இருக்கும் சரத்குமார், ஐபிஎல் போட்டி நடந்த கிரிக்கெட் மைதானத்தில் கையில் போதைப்பொருள் போன்ற ஒன்றை வைத்திருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
இதையும் படிக்க: “போதைப்பொருள் இல்லாத தமிழகம்”.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
திமுக மாணவரணி போராட்டம் அறிவிப்பு:
இந்த வீடியோ குறித்து விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார், தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். எனினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, “அரசின் உயர் பதவியில் இருக்கும் ஒருவரே இவ்வாறு செயல்பட்டது இளைஞர்களிடையே தவறான தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறி, அமைச்சர் சரத்குமாரைக் பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழகம் தழுவிய அளவில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்திருந்தது.
எழும்பூரில் அரங்கேறிய பரபரப்பு:
சென்னையில் மிக முக்கியப் போராட்டக் களமாக அறியப்படும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தின் அருகே இன்று காலை முதலே திமுக மாணவர் அணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அங்கு கண்டனக் கூட்டத்திற்காக தற்காலிகமாகப் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தன.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த எழும்பூர் உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர், இந்த கண்டனப் போராட்டத்திற்கு மாநகரக் காவல்துறை தரப்பில் முறையான அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி மேடை அமைப்பதைத் தடுத்தனர்.
போலீசாருடன் திமுகவினர் மல்லுக்கட்டு:
“ஜனநாயக ரீதியில் போராட எங்களுக்கு உரிமை உள்ளது” எனக் கூறி திமுக மாணவர் அமைப்பினர் போலீசாரின் தடையை மீறி மேடை அமைக்கும் பணியைத் தொடர்ந்தனர். இதனால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி கோஷமிட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
அதிரடி கைது மற்றும் மேடை அகற்றம்:
சூழ்நிலை கட்டுக்கடங்காமல் போவதைக் கவனித்த காவல்துறையினர், கூடுதல் போலீசாரை வரவழைத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி, திமுக மாணவர் அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைப் போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனங்களில் அடைத்து அதிரடியாகக் கைது செய்தனர். அதே நேரத்தில், அங்கு பாதிக்கும் மேல் அமைக்கப்பட்டிருந்த போராட்ட பந்தல், ஒலிபெருக்கிகள் மற்றும் கண்டன பதாகைகளை காவல்துறையினர் முழுமையாகப் பிடுங்கி, மாநகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.
இதையும் படிக்க : மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், முதன்முறையாக பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் போராட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்து, மேடையை அகற்றியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க எழும்பூர் பகுதியில் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.