“போதைப்பொருள் இல்லாத தமிழகம்”.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே பங்கேற்கும் இரண்டாவது அமர்வில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைகிறதா என்பது குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் அல்லது தடைகள் இருந்தால், அவற்றை உடனே நிவர்த்தி செய்வது குறித்தும் விவாதிக்கப்படும்.
சென்னை, ஜுன் 29: தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்ட மாநாடு தொடங்குகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த மாநாடு மூன்று முக்கிய அமர்வுகளாக பிரிக்கப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, மாநில காவல்துறை டி.ஜி.பி., அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களுக்கு (ஐ.எப்.எஸ்) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்
முதல் அமர்வு: சட்டம்-ஒழுங்கு
மாநாட்டின் முதல் அமர்வில் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள், போக்சோ (POCSO) வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
தொடர்ந்து, “போதைப்பொருள் இல்லாத தமிழகம்” என்ற இலக்கை முன்வைத்து அதற்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல். புகையிலை விற்பனைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல். கள்ளச்சாராயத்தை மாநிலத்திலிருந்து முழுமையாக ஒடுக்குவது.
இரண்டாவது அமர்வு: நலத்திட்டங்கள் ஆய்வு
மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே பங்கேற்கும் இரண்டாவது அமர்வில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைகிறதா என்பது குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் அல்லது தடைகள் இருந்தால், அவற்றை உடனே நிவர்த்தி செய்வது குறித்தும் விவாதிக்கப்படும்.
மூன்றாவது அமர்வு: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
மூன்றாவது மற்றும் இறுதி அமர்வில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஐஎப்எஸ் (IFS) அதிகாரிகளும் இணைந்து பங்கேற்கின்றனர். இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்ற சவால்கள் மற்றும் வனத்துறை சார்ந்த அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதலமைச்சர் உரை:
இந்த மூன்று அமர்வுகளின் நிறைவாக, மாநாட்டில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நிறைவுரையாற்ற உள்ளார். மேலும், இந்த மாநாட்டின் போது சிறப்பாகவும், திறமையாகவும் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளைப் பாராட்டி அவர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்க உள்ளார்.
இதையும் படிக்க : “ஒரே மாதத்தில் தவெக-வின் போலி பிம்பம் உடைந்துவிட்டது”.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!!
முன்னதாக, இந்த மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளாக நேற்று சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.