மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் கட்டணம்… ரயில்வே வெளியிட்ட திடீர் அறிவிப்பு… சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!
Ooty Mountain Train Fare: மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயிலில் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு சுற்றுலா பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி மலை ரயில் கட்டணம் திடீர் உயர்வு
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் ஊட்டி ரயில் நிலையத்துக்கு மலை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் சேவையானது தினந்தோறும் 8 பயணங்கள் கொண்ட சாதாரண கட்டண சேவை, கோடை விடுமுறை, பிற விடுமுறைகள், பண்டிகை நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, வார இறுதி நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், குடும்ப நிகழ்ச்சி, திருமணம், திருமண விழா மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவற்றுக்காக முழு ரயிலையும் தனியாக வாடகைக்கு எடுப்பது என்று 3 வகைகளில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மலை ரயிலில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கு மேட்டுப்பாளையம் முதல் குன்னூருக்கு ரூ.500, 2-ஆவது வகுப்பில் பயணிப்பதற்கு ரூ.550 வீதம் வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த கட்டணம் தற்போது 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை ரயில் கட்டணம் உயர்த்த காரணம்
இதில், கடந்த 2020- ஆம் ஆண்டு ஊட்டி மலை ரயிலில் சாதாரண கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், மேட்டுப்பாளையம் -குன்னூர், குன்னூர்-ஊட்டி, மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரயில் இயக்குவதற்கான செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள், பணியாளர்களின் சம்பளம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. இதனை ஈடு கட்டும் வகையிலும், மலை ரயிலுக்கான வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரயில் பிரிவில் சாதாரண ரயில்களின் அடிப்படை கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோடை கால சுற்றுலா செல்ல திட்டமா…நீலகிரிக்கு போய் பாருங்க..அசந்து போவீங்க!
இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய கட்டண முறை
மேலும், இந்த புதிய கட்டண நடைமுறை இன்று சனிக்கிழமை ( பிப்ரவரி 21) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, சாதாரண ரயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே 5 சதவீதம் உயர்த்தப்படும். ஆனால், முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்டணங்கள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஊட்டியில் மலை ரயில் பிரிவில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் மற்றும் சார்ட்டர் சிறப்பு ரயில்கள் ஆகியவற்றின் கட்டணங்களிலும் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சி
தமிழகத்தில் தற்போது கோடை காலம் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவார்கள். அவர்கள், அங்கு பிரபலமாக உள்ள மலை ரயிலில் பயணம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அப்படி இருக்கும் நிலையில், திடீரென ஊட்டி மலை ரயிலின் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நெருங்கும் சம்மர்..சுற்றுலா செல்ல சூப்பர் ஸ்பாட்..இங்க ஒரு விசிட்ட போட்டு பாருங்க!