கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. டெல்லியில் சிபிஐ முன்பு இன்று ஆஜராகிறார் விஜய்..
Vijay Appears Before CBI in Delhi Today: சிபிஐ விசாரணைக்காக நேற்றைய தினம் தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் 7 பேர் சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விஜய் தங்கியுள்ளார்.
டெல்லி, மார்ச் 15: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இவ்வழக்கு தொடர்பாக 3வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், அவர் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 7 பேர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் டெல்லி தாஜ் மான்சிங் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : கரூர் வழக்கு.. டெல்லி புறப்பட்ட விஜய்.. சிபிஐ விசாரணைக்கு மத்தியில் கூட்டணி பேச்சுவார்த்தை?
2 முறை சிபிஐ விசாரணை:
கரூரில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த ஜன.12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 2-வது முறையாக ஜன.19-ம் தேதி ஆஜரான அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3-வது முறையாக மார்ச் 10-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.




கோரிக்கையை நிராகரித்த சிபிஐ:
இதையடுத்து, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அதுகுறித்த பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்துமாறும், 15 நாட்கள் அவகாசம் அளிக்குமாறும் விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த சிபிஐ மார்ச் 15-ம் தேதி (இன்று) அவர் விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு உத்தரவிட்டனர்.
தனி விமானத்தில் டெல்லி பயணம்:
அதன்படி, சிபிஐ விசாரணைக்காக நேற்றைய தினம் தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் 7 பேர் சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் விஜய், இன்று காலை 10.45 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக உள்ளார்.
இதையும் படிக்க: விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய் – 20 நிமிடம் தாமதமாக கிளம்பிய விமானம் – என்ன நடந்தது?
இன்று காலை சிபிஐ முன் விஜய் ஆஜர்:
இந்த விசாரணையின்போது, ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட விசாரணையின்போது கோரப்பட்ட ஆவணங்களை விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். இந்த விசாரணை காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை வரை நீடிக்கும் என்று தெரிகிறது.