கோவையில் வெளுத்து வாங்கிய சூறாவளிக் காற்று.. வேரோடு சாய்ந்த மரங்கள்.. காற்றில் பறந்த கடைகளின் மேற்கூரைகள்!
தடாகம் சாலைப் பகுதியில் வீசிய காற்றின் காரணமாக, சாலையோரங்களில் இருந்த பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும், மரங்கள் விழுந்ததில் சில இடங்களில் மின் கம்பங்களும் உடைந்து சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
கோவை, ஜுன் 01: கோவையில் நேற்று மாலை திடீரென வீசிய பயங்கர சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையின் காரணமாகப் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. துடியலூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் சிறிய கடைகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கோடைக் காலம் முடிந்து, தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலை நேரத்தில் கருகருவென மேகங்கள் சூழ்ந்து, யாரும் எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியதுடன் பலத்த மழையும் பெய்தது.
இதையும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்.. நெல்லை சரக டிஐஜி உத்தரவு!
பறந்த மேற்கூரைகள்; அலறியடித்த மக்கள்:
கோவை புறநகர்ப் பகுதிகளான துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் வேகம் மிகக் கொடூரமாக இருந்தது. இந்த அதிரடிச் சூறாவளிக் காற்றின் வேகத்திற்குத் தாளாமல், சாலையோரம் இருந்த வணிக வளாகங்கள் மற்றும் தற்காலிகக் கடைகளின் மேற்கூரைகளான தகர ஷீட்டுகள் அப்படியே பெயர்ந்து காற்றில் தூக்கி வீசப்பட்டன.
சாலையில் திடீரெனப் பறந்து வந்த கூரைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அலறி அடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
சாய்ந்த மரங்கள் – மின் விநியோகம் பாதிப்பு:
தடாகம் சாலைப் பகுதியில் வீசிய காற்றின் காரணமாக, சாலையோரங்களில் இருந்த பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும், மரங்கள் விழுந்ததில் சில இடங்களில் மின் கம்பங்களும் உடைந்து சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.
போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு:
பாதிப்பு குறித்து தகவல் அறிந்தவுடன், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். சாலையில் விழுந்த மரங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சரிசெய்ததுடன், போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் விநியோகத்தை மீட்டெடுத்தனர்.
இதையும் படிக்க: சென்னையில் இளம்பெண் கார் ஏற்றி கொலை.. பாரில் நடந்தது என்ன?.. இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!
நேற்று மாலை வீசிய இந்தத் திடீர் சூறாவளித் தாக்குதலால் கோவையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் பெரும் பாதிப்பும், மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.