பாமக-வில் நிலவிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி?.. ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு.. ஜி.கே.மணியின் ரியாக்ஷன்!!
கட்சியின் தலைமைப் பொறுப்பு குறித்தும், கட்சியில் நிலவும் இரட்டை மாவட்டச் செயலாளர்கள் போன்ற நிர்வாகக் குழப்பங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜி.கே.மணி, "தற்போது மருத்துவர் ஐயா அவர்களும், அன்புமணி அவர்களும் சந்தித்திருப்பதுதான் மிக முக்கியமான செய்தி. மேற்கொண்டு கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திண்டிவனம், ஜுன் 25: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வந்ததாகக் கூறப்பட்ட கருத்து வேடுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், மருத்துவர் ராமதாஸை அவரது மகனான அன்புமணி ராமதாஸ் நேற்றைய தினம் நேரில் சந்தித்துப் பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை களிப்பியது. ஏனெனில், தந்தை மகன் இடையே ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு காரணமாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இருவரும் தனித்தனியே போட்டியிட்டனர். அதோடு, இரு தரப்பினரும் கடுமையாக மாறி மாறி குற்றம்சாட்டி மோதிக்கொண்டதோடு, இந்த மோதல் நீதிமன்றம் வரையும் சென்றது.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..
சந்திப்பை மனதார வரவேற்கிறேன்:
இப்படி இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், நேற்றைய தினம் நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. முக்கியமாக இந்த மோதல்களுக்கு ஜி.கே.மணி தான் முக்கிய காரணம் என்று அன்புமணி உட்பட அவரது ஆதரவாளர்களால் சரமாரியாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், தந்தை மகன் சந்திப்பு குறித்து பாமகவின் மூத்த தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். “தைலாபுரம் தோட்டத்தில், அன்புமணி நேரில் சந்தித்துப் பேசியிருப்பதை மனதார வரவேற்கிறேன். இதனை ஒரு நல்ல, மகிழ்ச்சியான சந்திப்பாக நான் பார்க்கிறேன். இந்த சந்திப்பின் மூலம் தந்தை – மகன் என்ற குடும்ப உறவு மேம்படும்” என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வலிமையான சக்தியாகத் திகழ்கிறது.
பாமகவிற்கு நல்ல செய்தி:
மருத்துவர் இந்த இயக்கத்தைத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை அவரைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை. அவர் தவிர்க்க முடியாத ஒரு மூத்த தலைவர். இடையில் கட்சிக்குள் ஒரு சில தேக்க நிலைகள் மற்றும் தொய்வு நிலைகள் இருந்தன. தற்போது தந்தை – மகன் ஒன்றிணைந்திருப்பது மக்கள் மத்தியில் ஒரு பேசும்பொருளாக மாறியுள்ளதுடன், பாட்டாளி மக்கள் கட்சிக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். இந்த சந்திப்பு இன்னும் கொஞ்சம் முன்னதாகவே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும், காலம் தாழ்த்தி நடந்திருந்தாலும் இது ஒரு நல்ல சந்திப்புதான். இனி கட்சியின் செயல்பாடுகள் நல்ல நோக்கத்தோடு தொடரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க: சிறுமிகளுக்கு முதலுதவி வழங்கியதை இழிவுபடுத்துவதா? அமைச்சர் விஸ்வநாதன் பதிலடி..
கட்சி நிர்வாகத்தில் உள்ள குழப்பங்களுக்குத் தீர்வு:
கட்சியின் தலைமைப் பொறுப்பு குறித்தும், கட்சியில் நிலவும் இரட்டை மாவட்டச் செயலாளர்கள் போன்ற நிர்வாகக் குழப்பங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜி.கே.மணி, “தற்போது மருத்துவரும், அன்புமணியும் சந்தித்திருப்பதுதான் மிக முக்கியமான செய்தி. மேற்கொண்டு கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கட்சியில் நிலவும் நிர்வாக ரீதியான பிரச்சனைகளைக் களைய, இருவரும் இணைந்து கட்சி நிர்வாகிகளை எல்லாம் நேரில் அழைத்து பேசி, ‘இனிமேல் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து, ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்’ என்று ஒரு வார்த்தை கூறிவிட்டால் போதும், கட்சியின் அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகிவிடும்” என்று சுட்டிக்காட்டினார்.