ஆழம் தெரியாமல் காலைவிட்டு.. அது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை – தங்கம் தென்னரசு
தனது நிர்வாகத் திறமையின்மையாலும், ‘ஆழம் தெரியாமல் காலைவிட்டு’ அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும், ‘புஸ்வானமாக’ மாறிவிட்டதை மறைக்க, ‘ஹைப்’ ஏற்றிய அறிக்கை ஒன்றை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் ‘ஃப்ளாப்’ ஆக்கியிருக்கிறது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஜூன் 17, 2026: தமிழக வெற்றிக் கழக அரசு தரப்பில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார். “அது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை” என அவர் சாடியுள்ளார். மேலும், தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற உடன், தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று மாலை இதுதொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.
நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு:
அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 4.87 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன் பெறப்பட்டுள்ளதாகவும், சுதந்திரத்திற்கு பிறகு 60 ஆண்டுகளில் பெறப்பட்ட கடனை விட கடந்த 5 ஆண்டுகளில் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சொந்த வரி வருவாய் சதவீதம் 5.45 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும், 2021-22ஆம் ஆண்டில் அது 5.93 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு 28 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது நாட்டிலேயே தமிழகத்தில் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை – தங்கம் தென்னரசு:
வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம்…
— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) June 16, 2026
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது: “வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ‘வாணவேடிக்கை வாக்குறுதிகளை’ அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு,
மேலும் படிக்க: விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக, அண்ணாமலை தரப்பு.. என்ன செய்யப்போகிறார் விராலிமலை ‘கிங் மேக்கர்’?
தனது நிர்வாகத் திறமையின்மையாலும், ‘ஆழம் தெரியாமல் காலைவிட்டு’ அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும், ‘புஸ்வானமாக’ மாறிவிட்டதை மறைக்க, ‘ஹைப்’ ஏற்றிய அறிக்கை ஒன்றை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் ‘ஃப்ளாப்’ ஆக்கியிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவிற்கு வந்து போராடத் தொடங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், அவர்களின் கோபக் கனலிலிருந்து தப்பித்துக்கொள்ளும் உத்தியாக (Escapism), தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டுள்ளது; வேறு எதற்கும் அல்ல! எனினும், உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.