மனவலியோடு அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. ராஜினாமா செய்த கையோடு சி. விஜயபாஸ்கர் அதிரடி முடிவு..
ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன் என சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 16, 2026: அதிமுகவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படும் வகையில், இன்று மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இதன் மூலம், அதிமுகவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவிலிருந்தும் விலகுவதாக சி. விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகும் சி. விஜயபாஸ்கர்:
🙏🏻#நன்றி#பயணம்_தொடரும் #PeopleFirst#TheJourneyContinues pic.twitter.com/0TTNUqW1Up
— Dr.C.Vijayabaskar (@Vijayabaskarofl) June 16, 2026
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், ‘அம்மா’ என்ற ஆருயிர் ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, என் மாணவர் பருவத்திலிருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இரண்டாவது தலைமுறையாகவும் என் வாழ்க்கைப் பாதையில் இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்தவன் நான்.
எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், என் அடையாளமும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும். மாணவர் அணியில் தொடங்கிய என் அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என, இந்த இயக்கம் ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக என்னை வழிநடத்தியது. என் இளமை, என் உழைப்பு, என் கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை.
அம்மா வாழ்ந்த பொற்காலத்தில் இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்ல; பெரிய பெருமையாகவும், பெரும் வரமாகவும், என் பாக்கியமாகவும் நான் கருதினேன்.
தனி ஒருவரின் தவறான முடிவு:
ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.
மனவலியோடு அதிமுகவிலிருந்து விலகுகிறேன்:
எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான கழகத்தினர், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன். ஒரு கட்சியிலிருந்து அல்ல; நான் விலகுவது என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து.
வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்… தொடர்வேன்,” என தெரிவித்துள்ளார்.