AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கோர்ட் அதிரடி உத்தரவு”.. சிங்கப்பூர் சிகிச்சையை பாதியில் முடித்துவிட்டு சென்னை திரும்பும் எ.வ.வேலு!!

சிங்கப்பூர் சிகிச்சையை முடித்துக் கொண்டு இன்னும் சற்று நேரத்தில் சர்வதேச விமானம் மூலமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எ.வ.வேலு வந்தடைகிறார். அவர் விமான நிலையம் வரும்போது செய்தியாளர்களைச் சந்தித்து இந்த வழக்குகறித்துத் தன் தரப்பு விளக்கத்தை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

“கோர்ட் அதிரடி உத்தரவு”.. சிங்கப்பூர் சிகிச்சையை பாதியில் முடித்துவிட்டு சென்னை திரும்பும் எ.வ.வேலு!!
எ.வ.வேலு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Jul 2026 12:44 PM IST

சென்னை, ஜூலை 12: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.5,000 கோடி ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் புதிய திருப்பமாக, மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூலை 12) அவசரமாகச் சென்னை திரும்புகிறார். சென்னை உயர் நீதிமன்றம் விதித்த கெடுவின் அடிப்படையில் அவர் இந்த வாரமே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்த வழக்கின் முழு பின்னணி மற்றும் தற்போதைய பரபரப்பான நிலவரம் குறித்த விரிவான தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!

ரூ.5,000 கோடி டெண்டர் முறைகேடு:

திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு பொறுப்பு வகித்தபோது, தமிழகத்தில் உள்ள முக்கியச் சாலைகளை மேம்படுத்துவதற்காக ‘ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்’ (CRIDP) கீழ் சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான டெண்டர் ஒதுக்கீடுகள், ஒப்பந்தங்கள் மற்றும் திட்டச் செயலாக்கத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும், அதிகார துஷ்பிரயோகமும் நடந்துள்ளதாக ஊழலுக்கு எதிரான ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை முதற்கட்டமாக ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) போலீசார், இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கருதி எ.வ.வேலு மற்றும் தொடர்புகளுடைய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

‘லுக்அவுட் நோட்டீஸ்’ முடக்கம்:

வழக்குப் பதிவைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தனிப்படையினர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் இல்லம், திருவண்ணாமலையில் உள்ள அவரது கல்வி நிறுவனங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் வீடுகள் எனப் பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரும் சோதனைகளை நடத்தினர். இந்தச் சோதனைகளின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரை நேரில் அழைத்து விசாரிக்கச் சம்மன் அனுப்பப்பட்டது.

எனினும், அதற்கு முன்பாகவே எ.வ.வேலு மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டார். அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு சென்றதால், அவர் நாடு திரும்புவதைக் கண்காணிக்கவும், விமான நிலையங்களில் அவரைத் தடுக்கவும் லஞ்ச ஒழிப்புத் துறையின் வேண்டுகோளின்படி ‘லுக்அவுட் நோட்டீஸ்’ (Lookout Notice) பிறப்பிக்கப்பட்டு சர்வதேச விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு:

சிங்கப்பூரில் இருந்தபடி தனது வழக்கறிஞர்கள் மூலமாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கடிதம் அனுப்பிய எ.வ.வேலு, தான் கடுமையான மருத்துவச் சிகிச்சையில் இருப்பதால் தற்போதைய சூழலில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர விசாரணையாக வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் அமைச்சரின் மருத்துவக் காரணங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், விசாரணைக்கு ஒத்துழைப்பது அவசியம் எனக் குறிப்பிட்டனர். மேலும், வருகிற ஜூலை 15-ஆம் தேதி (புதன்கிழமை) எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத் துறையின் சென்னை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிரடியாக இறுதி உத்தரவைப் பிறப்பித்தனர்.

இதையும் படிக்க : அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!

இன்று சென்னை வருகை – அடுத்தகட்ட நகர்வு:

நீதிமன்றத்தின் இந்த இறுக்கமான உத்தரவை அடுத்து, சிங்கப்பூர் சிகிச்சையை முடித்துக் கொண்டு இன்னும் சற்று நேரத்தில் சர்வதேச விமானம் மூலமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு எ.வ.வேலு வந்தடைகிறார். அவர் விமான நிலையம் வரும்போது செய்தியாளர்களைச் சந்தித்து இந்த வழக்குகறித்துத் தன் தரப்பு விளக்கத்தை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை திரும்பும் அவர், தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொள்வார் எனத் தெரிகிறது. இந்த விசாரணைக்குப் பிறகு நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயலாம் என்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Follow Us