நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராகாத எ.வ.வேலு.. காரணம் என்ன?
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், 'அறப்போர் இயக்கம்' என்ற சமூக நல அமைப்பு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விரிவான ஊழல் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சாலை உட்கட்டமைப்பு மற்றும் சாலை விரிவாக்க மேம்பாட்டுப் பணிகளில் பரவலான முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னை, ஜூலை 03: மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று வரவில்லை என்றும், கூடுதல் அவகாசம் கேட்டு அவரது வழக்கறிஞர்கள் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: “யாரும் செய்யலனா நாங்க செய்வோம்!”.. மதுரையில் திடீரென களம் இறங்கிய பொறுப்பு ஆளுநர்.. நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!
3.23 கோடி ரூபாய் ஊழல் புகார்:
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ‘அறப்போர் இயக்கம்’ என்ற சமூக நல அமைப்பு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விரிவான ஊழல் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சாலை உட்கட்டமைப்பு மற்றும் சாலை விரிவாக்க மேம்பாட்டுப் பணிகளில் பரவலான முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக, ஒப்பந்ததாரர்கள் சிலருக்குச் செய்து முடிக்கப்படாத பணிகளுக்கும், பல இடங்களில் சாலைகளே போடப்படாத பணிகளுக்கும் கூட, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கூட்டுச்சதியோடு விதிகளை மீறிப் பல கோடி ரூபாய் நிதிகள் விடுவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதில் முதற்கட்டமாக, சுமார் 3.23 கோடி ரூபாய் அளவிற்கு நேரடி நிதி முறைகேடு நடந்துள்ளதாகத் தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதிரடி சோதனையும் வழக்குப்பதிவும்:
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை, அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் உள்ள உண்மத்தன்மையை ஆராய்ந்து முறைப்படி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடுகள், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடிச் சோதனைகளை நடத்தினர். இந்தச் சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இன்று ஆஜராக சம்மன்:
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மற்றும் இந்த ஊழல் வழக்கு தொடர்பாக நேரில் விசாரணை நடத்தி, உரிய விளக்கம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சில நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை அவர்கள் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!
உடல்நிலையைக் காரணம்காட்டி அவகாசம்:
இந்நிலையில், இன்று எ.வ.வேலு விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்று அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமக்குத் தற்பொழுது உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் நேரில் வர இயலவில்லை என்றும், இந்த விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கத் தமக்குக் கூடுதல் அவகாசம் தேவை என்றும் அவர் தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அல்லது வேறு ஒரு தகுந்த தேதியில் ஆஜராக அனுமதிக்குமாறு, எ.வ.வேலுவின் வழக்கறிஞர்கள் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் கடிதம் வழங்கி அதற்கான நேரத்தைக் கேட்க உள்ளதாகச் செய்தியாளர் கதிரவன் தெரிவித்துள்ளார்.