DMK R.S. Bharathi: அண்ணா, பெரியாரை இழிவுப்படுத்துவது பொறுத்துக்கொள்ள முடியாது.. கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி..!
Madurai Murugan Manadu: மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்கத் தலைவர்கள் பெரியார், அண்ணா ஆகியோரை இழிவுபடுத்தும் வீடியோ ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, அதிமுக தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை திமுக கண்டித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்தச் செயலை கடுமையாக விமர்சித்து, மக்களே இதற்குப் பதிலளிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன் 24: கடந்த 2025 ஜூன் 22ம் தேதி மதுரையில் உள்ள பாண்டிகோவில் அருகில் இந்து முன்னணி சார்பில் முருகன் பக்தர்கள் மாநாடு (Madurai Murugan Manadu) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை (Annamalai), ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண், முன்னாள் அதிமுக அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார், அதிமுக மூத்த நிர்வாகிகளான செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முருகன் பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்க தலைவர்களான தந்தை பெரியார் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை ஆகியோரை இழிவுபடுத்தி வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி (R. S. Bharathi) கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கண்டனம்:
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தபோது, “மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்ததை போல, ஒன் டூ ஒன் உடன் பிறப்பே என்ற தலைப்பில் ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களை சந்தித்து உரையாற்றினோம். ஒரு குழுவிடம் கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கு மேலாக உட்கார்ந்து குறைகளை கேட்டு ஆலோசனை நடத்தினோம். இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தொண்டர்களும் மனம்விட்டு பேசினார்கள். இதை தொடர்ந்து, வருகின்ற 2025 ஜூலை 1,2 மற்றும் 3ம் தேதிகளில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெறவுள்ளது. ” என்றார்.




முருகன் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ என்ன..?
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்னும் இல்லாத மேட்டருக்கு வீர வசனங்கள் பேசிய அருமை பங்காளி அண்ணன் உதயகுமார் அவர்கள், ஒரு பொம்மை போல வாயடைத்து பாஜகவின் போலி முருக பக்தர்கள் மாநாட்டில் உட்கார்ந்து, தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் விமர்சித்த காணொளியை ரசித்துக் கொண்டிருப்பதைப்… pic.twitter.com/ceb4G2UVXA
— DMK IT WING (@DMKITwing) June 23, 2025
தொடர்ந்து செய்தியாளர்கள் மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “மதுரை முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா இழிவுப்படுத்தியதை பார்த்து, எங்களை விட மக்களே அதிகம் கொதித்துபோய் இருக்கிறார்கள். தமிழ்நாடே கொதித்துபோய் இருக்கிறது. காரணம், பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள், தமிழ்நாட்டு அரசியலில் நிலைத்ததே கிடையாது. ஆக, இருபெரும் தலைவர்களையும் பழித்து பேசியவர்களை திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமல்ல, தமிழ் உணர்வுமிக்க அத்தனை பேரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே, இதற்கான பதிலை மக்களே கொடுப்பார்கள். பெரியார், அண்ணாவை இழிவுபடுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. முருகன் பக்தர்கள் மாநாட்டை மக்களே புறக்கணித்துவிட்டார்கள் என்று சொல்லலாம்” என தெரிவித்தார்.