சென்னை, மார்ச் 3, 2026: கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சின்னம்மை நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது சுகாதாரத் துறை சார்பில் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், சின்னம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சின்னம்மை நோய்:
பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னம்மை நோய் என்பது Varicella-Zoster வைரஸ் காரணமாக ஏற்படும் மிகவும் எளிதில் பரவும் வைரஸ் தொற்று நோயாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவர் இருமல் அல்லது தும்மலின் போது வெளியேறும் காற்றுத் துளிகள் (airborne droplets) மூலம், கொப்புளங்களில் (vesicles) இருந்து வரும் திரவத்தைத் தொடுவதன் மூலம் அல்லது அவர்கள் பயன்படுத்திய உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பரவுகிறது.
இந்நோய் பொதுவாக லேசான காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மை போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, பின்னர் உடலில் சிறிய நீர்த்துளைகள் போன்ற கொப்புளங்கள் தோன்றும். அவை உடலெங்கும் பரவி, சில நாட்களில் வெடித்து காய்ந்து விடும்.
மேலும் படிக்க: கூட்டணியில் குழப்பம்.. காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு மேலிடத்தில் இருந்து வந்த போன் கால்..
இந்த நோய் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பொதுவாக லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்தி, சரியான சிகிச்சை அளித்தால் எளிதில் குணமாகும்.
பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்:
-
தனிநபர் சுத்தத்தை கடைப்பிடித்து, கைகளை அடிக்கடி கழுவுதல்.
-
இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளுதல்.
-
நீர்ச்சத்து மிகுந்த, சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.
-
பாதிக்கப்பட்டவர்களை அனைத்து கொப்புளங்களும் காய்ந்து விழும் வரை (சுமார் 7–10 நாட்கள்) வீட்டில் தனிமைப்படுத்தி வைத்தல்.
-
பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
-
பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல்.
-
பாதிக்கப்பட்டவர்களின் உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை கிருமிநாசினி அல்லது சூடான தண்ணீரில் சுத்தம் செய்தல்.
மேலும் படிக்க: தயாரான தேர்தல் அறிக்கை.. இன்று பனையூரில் நடக்கும் தவெக ஆலோசனை கூட்டம்..
நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும் தகவல்களுக்கு 24 மணி நேர 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.