“டாஸ்மாக்கிற்கு பறந்த கெடு, ரவுடிகள் வேட்டை!”.. புதிய ஆட்சியில் எல்லாம் மாறுது.. சென்னை கமிஷனரின் அதிரடி உத்தரவுகள்!
போக்ஸோ வழக்குகளில் எக்காரணம் கொண்டும் 60 நாட்களுக்கு மேல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கக் கூடாது; உடனே கைது நடவடிக்கை பாய வேண்டும். எஸ்சி/எஸ்டி (SC/ST Act) வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளைக் காவல் ஆணையரே நேரடியாக அடிக்கடி ஆய்வு செய்வார்.
முதலமைச்சர் விஜய் அவர்களின் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சென்னை மாநகர காவல்துறை நிர்வாகத்தை முற்றிலும் சீரமைக்கவும், இரவு நேரக் குற்றச் சம்பவங்களை முற்றிலும் ஒடுக்கவும் சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது முதல் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை நடத்துவது வரை, காவல் ஆணையர் பிறப்பித்துள்ள 15 முக்கிய அதிரடி உத்தரவுகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இதையும் படிக்க: நாகப்பட்டினம் வரலாறு.. நெதர்லாந்து டூ இந்தியா வரும் சோழர்கால செப்பேடுகள்.. அண்ணாமலை சொன்ன விளக்கம்!
டாஸ்மாக் கடைகளுக்குக் கடுமையான கெடு:
சென்னையில் உள்ள சாதாரண டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் இரவு 10.00 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். எஃப்.எல்.2 (FL2) மற்றும் எஃப்.எல்.3 (FL3) உரிமம் பெற்ற பார்கள் மற்றும் மதுக்கூடங்கள் முறையே இரவு 11.00 மணி மற்றும் நள்ளிரவு 12.00 மணிக்குள் மூடப்பட வேண்டும். கடைகள் சரியான நேரத்திற்கு மூடப்படுவதை ரோந்து வாகன போலீஸார் நேரில் கண்காணித்து, புகைப்படம் எடுத்து பிரத்யேக காவல்துறை குழுவில் பதிவிட வேண்டும்.
சட்டவிரோத விற்பனைக்குத் தடை:
அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் காவல் துறையால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தவிர, வேறு எந்தப் பகுதியிலும், எந்த நேரத்திலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறக் கூடாது என்பதை அதிகாரிகள் முற்றிலும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயல்படும் கடைகள் மற்றும் விதிகளை மீறி மது விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும் என சென்னை காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை வார்னிங்:
அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நேரத்தைத் தவிர்த்து சட்டவிரோதமாக பார்பி மற்றும் ‘லூஸ் சேல்ஸ்’ முறையில் மது விற்பனை நடந்தால், அதற்குப் பொறுப்பான பீட் ஆபீசர்கள் மற்றும் ரோந்து அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொலை வழக்குகளுக்கு 90 நாட்கள் கெடு:
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் முன்மொழிவுகளை உதவி ஆணையர்கள் முறையாக ஆய்வு செய்து அட்வைசரி போர்டு மற்றும் உயர் நீதிமன்ற நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும். எந்தவொரு கொலை வழக்கிலும் 90 நாட்களுக்கு மேல் விசாரணை நீடிக்கக் கூடாது; அதற்குள் துரிதமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
ஏ-கேட்டகிரி ரவுடிகள் வேட்டை:
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் ‘A பிளேஸ்’ மற்றும் ‘A கேட்டகிரி’ ரவுடிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய, தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து போலீஸார் தொடர்ந்து பின் தொடர வேண்டும். ரவுடிகளைக் கண்காணிக்கத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல்:
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களின் ‘புரொஃபைலிங்’ தயாரிக்கப்பட்டு, அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதுடன், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். போதைப்பொருள் தொடர்பான கமர்சியல் வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
போக்ஸோ & எஸ்சி/எஸ்டி வழக்குகள்:
போக்ஸோ வழக்குகளில் எக்காரணம் கொண்டும் 60 நாட்களுக்கு மேல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கக் கூடாது; உடனே கைது நடவடிக்கை பாய வேண்டும். எஸ்சி/எஸ்டி (SC/ST Act) வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளைக் காவல் ஆணையரே நேரடியாக அடிக்கடி ஆய்வு செய்வார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ மற்றும் ‘ஆண்டி பைரசி’ குழுக்களின் செயல்பாடுகள் முறையாகக் கண்காணிக்கப்படும்.
காவல் நிலையங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்:
மாலை 6.00 மணிக்கு மேல் காவல் நிலையங்களுக்குள் ரைட்டர்கள் மற்றும் சென்டரி பணியாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும். காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து உயர் அதிகாரிகளும் காவல் நிலையத்தை விட்டு வெளியேறி, பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்.
இதையும் படிக்க: முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களும்.. திமுகவின் தேர்தல் சறுக்கல்களும்.. முழு விவரம்
பொதுமக்களை அலைக்கழித்தால் சஸ்பெண்ட் எச்சரிக்கை:
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை அங்குள்ள வரவேற்பாளர்களும், அதிகாரிகளும் மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும். புகார்களைப் பெற்று உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்; புகார்தாரர்களை அலைக்கழித்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.