’கோயில் விழாக்களில் கூடுவது நாகரிகத்தின் அடையாளமல்ல ’ – சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj Sparks: பெங்களூரு மைதானத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவில் விழாக்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கூடும் கூட்டம் நாகரிகத்தின் அடையாளமல்ல என அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்தார். இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் அண்ணாமலை மற்றும் எஸ்.ஜி. சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சென்னை ஜூன் 06: பெங்களூரு (Bangalore) மைதானத்தில் கூட்ட நெரிசலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விளையாட்டு மற்றும் கோவில் விழாக்களில் கூடும் கூட்டம் நாகரீகத்தின் அடையாளமல்ல என அமைச்சர் மனோ தங்கராஜ் (Minister Mano Thangaraj) தெரிவித்தார். பொதுமக்கள் அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தக் கருத்துக்கு எதிர்வியமாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை (BJP Ex Leader Annamalai) மற்றும் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கடும் கண்டனம் தெரிவித்தனர். பக்தி மற்றும் கலாசாரங்களை அவமதிக்கிறாரா என அவர்கள் கேள்வி எழுப்பினர். திமுகவின் இரட்டை நிலைப்பாடு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஆகியவையும் அவர்கள் விமர்சித்தனர்.
விழாக்களிலும் விளையாட்டிலும் கூடும் கூட்டம் நாகரிகத்தின் குறியீடல்ல
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, “விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் கூடும் கூட்டத்தை நாகரீக சமூகத்தின் நல்ல அடையாளமாக பார்க்க முடியாது” என கூறியதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பொது மக்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்
அமைச்சர் மனோ தங்கராஜ் மேலும் கூறியதாவது: “எல்லா இடங்களிலும் இத்தகைய கூட்ட நெரிசல் சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. பொது இடங்களில் கூடும் போது, மக்கள் அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும். முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து. பகுத்தறிவு அடிப்படையில் சமூக கட்டமைப்பு அமைய வேண்டும் என்பது என் எண்ணம்.” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
அண்ணாமலை எக்ஸ் பதிவு
கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்.
கோவில்…
— K.Annamalai (@annamalai_k) June 5, 2025
சமூக விழிப்புணர்வு தேவையா?
சமீப காலமாக, கும்பமேளா, திரைப்பட விழாக்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கூட்டநெரிசல் காரணமாக பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. இதைத் தடுக்கும் வகையில், விழிப்புணர்வுடன் கூட்டத்தை நிர்வகிக்க வேண்டும் என்பதே சிலர் வலியுறுத்தும் சிந்தனையாகவும் இருக்கிறது. ஆனால், இது மதநம்பிக்கையையும் கலாசார பழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமையக்கூடாது என்பதே எதிர்க்கட்சி கருத்தாக உள்ளது.
அண்ணாமலையின் கண்டனம்
இந்தக் கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்த, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “மக்கள் கோயில் விழாக்களுக்கு செல்லக்கூடாது என கூறியதால், இது பக்தி, கலாசாரம், நாகரிகம் ஆகியவற்றின் அவமதிப்பாகும்” என்று எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திமுக கட்சியின் இரட்டை நிலைப்பாடு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவையும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசியல் தாக்கம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அதேபோல் பாஜக செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, “கோயில் விழாக்களில் கலந்து கொள்ளும் துர்கா ஸ்டாலின் மற்றும் திமுக குடும்பத்தினரும் நாகரிகமற்றவர்களா?” என்று கேள்வி எழுப்பி அமைச்சர் மனோ தங்கராஜின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.