உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வு அறை.. இவ்வளவு வசதிகளா? எங்கெங்கு தெரியுமா?
Chennai Free lounges For Gig Workers : சென்னை அண்ணா நகர், கே.கே. நகரில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வு எடுக்க வசதியாக மாநகராட்சி சார்பில் ஏசி வசதியுடன் அறைகள் திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இரண்டு இடங்களில் ஓய்வு அறைகள் திறக்கப்பட்ட நிலையில், வரும் நாட்களில் பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை, ஜூன் 12 : சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஓய்வு எடுக்கும் வகையில், மாநகராட்சி (greater chennai corporation) சார்பில் இரண்டு இடங்களில் ஓய்வு அறைகள் (Chennai free lounges)அமைக்கப்பட்டுள்ளது. ஏசி வசதிகளுடன் கூடிய நவீன ஓய்வு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டெலிவரி செய்யும் பெண்கள் பயனடைவார்கள். சென்னையில் சொமேட்டோ, ஸ்விக்கி, பிளிக்கிட், செப்டோ போன்ற உணவு விநியோகம், பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டெலிவரி பணிகளில் முதலில் ஆண்கள் மட்டுமே வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது அதில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரியில் பெண்களும் பணியாற்றி வருகின்றனர். இரவு நேரத்திலும் பெண்கள் உணவு விநியோகம் செய்வதை நம்மால் பார்க்க முடியும்.
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஓய்வு அறை
ஆனால், இவர்களுக்கு நிரந்தர பணி கிடையாது. அதே நேரத்தில் பணியில் இருக்கும்போது கழிவறை போன்ற வசதிகளை பயன்படுத்த அலைகின்றனர். இதனால், தங்களுக்கு ஓய்வு அறை வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.




இந்த நிலையில், உணவு டெலிவரி செய்யும் பெண்கள் ஆண்களுக்கு ஓய்வு அறையை சென்னை மாநகராட்சி திறந்து வைத்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இரண்டு பகுதிகளான அண்ணா நகர் மற்றும் கே.கே. நகர் ஆகிய இடங்களில் இந்த ஓய்வு அறைகளை சென்னை மாநகராட்சி திறந்து வைத்துள்ளது.
ரூ.25 லட்சம் மதிப்பில் இந்த ஓய்வு அறைகளை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது. 200 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இந்த ஓய்வறையில் ஒரே நேரத்தில் 20 பேர் இளைப்பாறலாம். கடுமையான வெயிலிலும், குளிரிலும், கனமழையிலும் வேலை செய்யும் உணவு டெலிவிரி பணியாளர்களுக்கு ஓய்வு அறை மூலம் பயன் கிடைக்கும்.
இவ்வளவு வசதிகளா?
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள், அண்ணாநகர் 3 வது நிழற்சாலையில் இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்காக 25.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினை (Gig Workers Lounge) திறந்து வைத்தார்.#CMMKSTALIN pic.twitter.com/AVm1mCjrTU
— TN DIPR (@TNDIPRNEWS) June 11, 2025
இந்த ஓய்வு அறைகளில் ஏசி வசதிகள், ஆண், பெண்களுக்கு ஒரு கழிவறை, குடிநீர் வசதி, 25 பேர் அமரும் வகையில் நாற்காலி, கைபேசிக்கான சார்ஜிங் பாய்ண்ட், இணையதள வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், இதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. அதே நேரத்தில், ஓய்வறையைப் பயன்படுத்த உணவு டெலிவரி ஊழியர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
இந்த ஓய்வு அறை பிற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 2025-26ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சென்னையில் முக்கிய 10 இடங்களில் ஓய்வு அறை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டெலிவரி ஊழியர் ஒருவர் கூறுகையில், “உணவக உரிமையாளர்கள் எங்களை உள்ளே அனுமதிக்காததால், நாங்கள் பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், சாலையோரங்களில் ஓய்வெடுப்போம்.
இது ஒரு நல்ல முயற்சி. இப்போது நாங்கள் ஓய்வெடுக்கலாம், கழிப்பறையைப் பயன்படுத்தலாம். எங்கள் மொபைல் போன்களை இங்கே சார்ஜ் செய்யலாம். முன்பு, நாங்கள் பவர் பேங்க்களை நம்பியிருந்தோம். இந்த ஓய்வு அறை எங்களுக்கு பெரிதும் உதவும்” என்றார்.