தவெகவில் செங்கோட்டையனுடன் மனக்கசப்பா? – ஆனந்த் விளக்கம்
Anand Breaks Silence on Sengottaiyan: தவெகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்திற்கும் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், அதனால் கட்சிப் பணிகளில் இருந்து அவர் ஒதுக்கப்படுவதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த தகவலுக்கு ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.
சென்னை, ஜனவரி 21 : சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைமை அலுவலகத்தில் ஜனவரி 21, 2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 392 பேர் தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், கட்சிக்குள் எந்தவித பிளவும் இல்லை என்றும், செங்கோட்டையனுடன் (Sengottaiyan) கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தினார். கடந்த சில நாட்களாக பரவி வந்த தகவல்களுக்கு இதன் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் பேசியது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
செங்கோட்டையனுடன் மனக்கசப்பா?
இது தொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த், கட்சியில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். எங்களுக்குள் சிறிய கருத்து வேறுபாடுகள்கூட இல்லை. செங்கோட்டையனுடன் எந்தவித பகையும் இல்லை. செங்கோட்டையனுடன் மனக்கசப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. எங்களுக்குப் பொருத்தவரை, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் அனைவரும் கட்சி தொண்டர்கள்தான் என்றார்.
இதையும் படிக்க : நீடிக்கும் கூட்டணி குழப்பம்.. ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசிக்கும் முடிவில் திமுக?




மேலும் பேசிய அவர், செங்கோட்டையன், 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 9 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருடைய அனுபவத்தையும் அரசியல் பயணத்தையும் அனைவரும் மதிக்கிறோம், என்றார். தவெகவில் அண்மைக்காலமாக ஆனந்த்திற்கும் செங்கோட்டையனுக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும், இதனால் செங்கோட்டையன் கட்சி பணிகளில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக பரவி தகவல்களுக்கு இந்த உரை மூலம் ஆனந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கட்சி தலைமையில் ஒற்றுமை நிலவுவதாகவும், அனைவரும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் பல்வேறு கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தவெகவில் இணைந்திருப்பது, கட்சியின் வளர்ச்சிக்கும், எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்கும் முக்கிய அடித்தளமாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு, தவெக வலுவடைந்து வருவதை காட்டுகிறது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க : சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் காணும் தவெக?.. கூட்டணி நிலவரம் எப்படி உள்ளது?
தவெகவுக்கு விசில் சின்னம்?
வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக முதன்முறையாக களம்காணுகிறது. இதனால் அந்த கட்சிக்கு தனி சின்னம் கிடைக்காது. பொது சின்னம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் களமிறங்க வேண்டும். இந்த நிலையில் அக்கட்சியின் சார்பில் சார்பில் விசில், ஆட்டோ, கப்பல், கிரிக்கெட் பேட் போன்ற சின்னங்களை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் விசில் சின்னத்தை தான் விஜய் தரப்பு அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பிற கட்சிகள் உடன் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால் கட்சியின் சின்னத்தை தேர்வு செய்வது அவசியமாகிறது.