அதிமுக பிரமுகருக்கு நடுரோட்டில் அரிவாள் வெட்டு…ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க பிரிந்த உயிர்..பரபரப்பில் மதுரை!
Madurai Crime: மதுரை அருகே முன் பகை காரணமாக அதிமுக பிரமுகரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மதுரை அருகே அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த சக்தி மகன் செந்தில் குமார் (36 வயது). அதிமுக பிரமுகரான இவர், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியின் அருகே சொந்தமாக டீ கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், செந்தில்குமார் வழக்கம் போல இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அதிகாலை டீ கடையை திறப்பதற்காக வீட்டில் இருந்து சென்றார். அப்போது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழி மறித்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது, அந்தக் கும்பலுக்கும், செந்தில் குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இது கைகலப்பாக மாறி உள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தான் வைத்திருந்த அறிவாள் உள்ளிட்ட பயங்க ஆயுதங்களால் செந்தில் குமாரை சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பி சென்றது. இதில், செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில்…
இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சிலைமான் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சிலைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் செந்தில்குமாரின் டீ கடை அருகே சிலர் மது அருந்தி வந்ததாகவும், அவர்கள் அந்த வழியாக சென்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் இருந்து மது கடத்தலுக்கு செக்..கலால் துறையின் பக்கா ஏற்பாடு..என்ன அது!
முன் பகையால் கொலையா…
அப்போது, மது அருந்திய நபர்களை, செந்தில்குமார் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதில், செந்தில்குமாருக்கும், அந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பகை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், முன் பகை காரணமாக அந்த கும்பல் அதிமுக பிரமுகர் செந்தில் குமாரை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் சாமநத்தம் ஊராட்சி துணைத் தலைவராகவும், திருப்பரங்குன்றம் அதிமுகவின் ஒன்றிய செயலாளரிடமும் பணிபுரிந்துள்ளார்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில்
கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில், சில முக்கிய காட்சிகள் கிடைத்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: மாமனார், மாமியாருடன் சண்டை.. கைக்குழந்தையுடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!! இன்ஸ்டாவில் கடைசி வீடியோ!