துணி காய வைத்ததில் ஏற்பட்ட பிரச்சனை.. சென்னை மேடவாக்கத்தில் 47 வயது பெண் உயிரிழந்த சோகம்..
Chennai Crime: நன்மங்கலம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி மஞ்சுளா, 47. கடந்த 21-ம் தேதி பிற்பகல் மஞ்சுளா துணிகளைத் துவைத்துவிட்டு, குடியிருப்பின் வாகன நிறுத்தும் பகுதியில் காய வைத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
செப்டம்பர் 2, 2026: சென்னை மேடவாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் துணி காய வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட 47 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் மெயின் ரோடு, நன்மங்கலம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி மஞ்சுளா, 47. கடந்த 21-ம் தேதி பிற்பகல் மஞ்சுளா துணிகளைத் துவைத்துவிட்டு, குடியிருப்பின் வாகன நிறுத்தும் பகுதியில் காய வைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
துணி காய வைத்ததில் ஏற்பட்ட தகராறு:
அப்போது, அதே குடியிருப்பைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் மஞ்சுளாவுக்கும் இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. “இங்கு துணிகளை காய வைக்கக்கூடாது; இது வாகன நிறுத்துமிடம்” என விஜி கூறியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: செய்வினையால் வந்த வினை.. கிருஷ்ணகிரியில் மூதாட்டியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய சகோதரிகள்.. போலீசாரிடம் பகீர் வாக்குமூலம்!
இதில் ஆத்திரமடைந்த விஜி, தனது கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் மஞ்சுளாவின் தலையில் ஓங்கி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மஞ்சுளாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 47 வயது பெண்:
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேடவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மஞ்சுளாவுக்கு தொடர்ந்து தலைவலி ஏற்பட்டதால், கடந்த 25-ம் தேதி கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல் துறையினர் விசாரணை:
ஹெல்மெட்டால் விஜி தாக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாகவே மஞ்சுளா உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, மஞ்சுளாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: வெளிநாட்டு செல்லப்பிராணிகள் வைத்துள்ளீர்களா? 15 நாட்களுக்கும் உரிமம் பெற வேண்டும் – இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்..
பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மஞ்சுளாவின் உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விஜியிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துணி காய வைப்பது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகராறு, பெண் உயிரிழக்கும் அளவுக்கு சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.