T20 World Cup: வெஸ்ட் இண்டீஸ் இமாலய வெற்றி.. இந்தியாவுக்கு உருவான புதிய சவால்..
இந்தியா தனது அடுத்த போட்டியில் வியாழக்கிழமை (பிப்.26) சென்னையில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அதே நாளில், குரூப் 1-ல் மற்றொரு ‘சூப்பர் 8’ ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் அகமதாபாத்தில் மோதுகின்றன. இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது இந்த போட்டியின் முடிவைச் சார்ந்தே இருக்கும்.
டி20 உலகக்கோப்பை 2026ல் (T20 World Cup 2026) மும்பையில் நேற்று (பிப்.23) நடைபெற்ற ‘சூப்பர் 8’ போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் 107 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இது 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் இந்தியாவின் வாய்ப்புகளுக்கு மற்றுமொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதால் பின்னடைவில் இருந்த இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளின் இந்த இமாலய வெற்றிக்குப் பிறகு, தங்களது நிகர ரன் ரேட்டை (NRR) வலுவாக வைத்திருக்க எஞ்சியுள்ள போட்டிகளில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதையும் படிக்க: விராட் கோலி இருந்திருந்தால்.. தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு இந்திய ரசிகர்கள் புலம்பல்!
படுதோல்வியை தழுவிய ஜிம்பாப்பவே:
அந்தவகையில், நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில், ஷிம்ரோன் ஹெட்மயர் 34 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். ரோவ்மன் பவல் அதிரடியாக அரைசதம் அடிக்க, அந்த அணி 254/6 ரன்களைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து, விளையாடிய ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குடாகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜிம்பாப்வே இலக்கை எட்ட முடியாமல் படுதோல்வியை தழுவியது.
ஜிம்பாப்வேயை எதிர்கொள்ளும் இந்தியா:
இந்தநிலையில், இந்தியா தனது அடுத்த போட்டியில் வியாழக்கிழமை (பிப்.26) சென்னையில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அதே நாளில், குரூப் 1-ல் மற்றொரு ‘சூப்பர் 8’ ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் அகமதாபாத்தில் மோதுகின்றன. இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது இந்த போட்டியின் முடிவைச் சார்ந்தே இருக்கும். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்தியாவின் பாதை சற்று எளிதாகும். அவ்வாறு, இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறத் தேவையான சூழல்கள் குறித்து பார்க்கலாம்.
இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்:
இந்தியா தனது மீதமுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றால், 3 போட்டிகளில் 4 புள்ளிகளைப் பெறும். தென்னாப்பிரிக்கா தனது மூன்று ‘சூப்பர் 8’ போட்டிகளிலும் வெற்றி பெற்றால், இந்தியா அவர்களுடன் இணைந்து அரையிறுதிக்குச் செல்லும். எனினும், தென்னாப்பிரிக்கா மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றால், தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு தீர்மானிக்கப்படும். ஒருவேளை தென்னாப்பிரிக்கா தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோற்றால், இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் தகுதி பெறும்.
இதையும் படிக்க: சூப்பர் 8 சுற்றில் இந்தியாவின் முதல் சறுக்கல்.. அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புகள் என்னென்ன?
ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால்:
இந்தியா தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். தென்னாப்பிரிக்கா தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்தியா மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடித்து ஜிம்பாப்வேயிடம் தோற்றால் – இந்தியா, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் இருக்கும். இங்கும் ரன் ரேட் தான் முடிவைத் தீர்மானிக்கும். ஆனால், தென்னாப்பிரிக்கா தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோற்றால், இந்திய அணி தகுதி பெற முடியாது.