IPL Final 2025: ஆர்சிபி வெற்றிக்காக விழா நடத்த வேண்டும்.. அரசு விடுமுறை நாளாக அறிவிக்க பெங்களூரு ரசிகர் கோரிக்கை!

RCB Fan's Bold Request: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) தகுதி பெற்றுள்ளது. ஒரு ரசிகர், RCB வெற்றி பெற்றால் அதனை "RCB ரசிகர்கள் விழா நாள்" என அறிவித்து பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக ராஜ்யோத்சவம் போலவே, அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழாவைக் கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IPL Final 2025: ஆர்சிபி வெற்றிக்காக விழா நடத்த வேண்டும்.. அரசு விடுமுறை நாளாக அறிவிக்க பெங்களூரு ரசிகர் கோரிக்கை!

ஆர்சிபி ரசிகரின் கோரிக்கை

Published: 

30 May 2025 19:27 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) முதல் குவாலிபையர் சுற்றில் பஞ்சாப் கிங்ஸை (Punjab Kings) 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி நுழைந்தது. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள், தங்களது பேவரைட் டீம் ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வெல்வதை பார்க்க 18 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தநிலையில், ரசிகர் ஒருவர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஒரு தனித்துவமான கோரிக்கையுடன் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என்ன கடிதம் அது.. ? என்ன எழுதியிருந்தார்?

கர்நாடகா அடுத்த பெலகாவி மாவட்டத்தின் கோகாக்கைச் சேர்ந்த சிவானந்த மல்லன்னவர் என்ற இளைஞர், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் அவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெறும் நாளை ஆர்சிபி ரசிகர்களின் விழாவாக அறிவிக்க வேண்டும் என்றும், பெங்களூரு அணி பட்டத்தை வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

முழுமையான கடிதத்தின் விவரம்:

சிவானந்தா தனது கடிதத்தில், ” ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றால், அந்த நாளை கர்நாடகா மாநில ஆர்சிபி ரசிகர்கள் விழா என்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கு ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை அளிக்க வேண்டும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களின் நீண்டகால கனவு நனவாகவுள்ளதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் கர்நாடக ராஜ்யோத்சவாவை கொண்டாடுவது போலவே ஆர்சிபி ரசிகர்கள் விழாவையும் கொண்டாட கர்நாடக அரசு வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களின் சார்பாகவும், கர்நாடக அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொண்டு விடுமுறை மற்றும் ஆர்சிபி ஆர்சிபி ரசிகர்கள் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

இறுதிப்போட்டி எப்போது..?

ஐபிஎல் 2025ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல, இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது. ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2025 ஜூன் 1ம் தேதி நடைபெறும் குவாலிஃபையர் 2 வெர்றியாளருடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகிறது.