Gautam Gambhir: பும்ரா மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவாரா..? கவுதம் கம்பீர் விளக்கம்!
Jasprit Bumrah Workload: லீட்ஸ் டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ராவின் பங்களிப்பு மற்றும் எஞ்சிய போட்டிகளில் அவரது பங்கு குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும், அவரது சுமையைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2025 சாம்பியன்ஸ் டிராபி (2025 Champions Trophy) வெற்றிக்கு பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இங்கு, இங்கிலாந்தில் இந்திய அணி தோல்வியுடன் தொடங்கியுள்ளது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் (India vs England 1st Test) இந்திய அணியில் 5 சதங்கள் அடித்த போதிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) இந்திய அணி முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய பந்துவீச்சாளர்களில் பும்ராவை தவிர, மற்ற பந்துவீச்சாளர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன் காரணமாக, 371 ரன்கள் என்ற இலக்கிற்குள் இங்கிலாந்தை இந்திய அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. இப்போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 போட்டிகளில் விளையாடாதது குறித்து பேசியுள்ளார்.




கவுதம் கம்பீர் என்ன சொன்னார்?
Gautam Gambhir opens up about Jasprit Bumrah’s workload for the remaining England Tests. 🏏
📸: BCCI/ECB/X#OneTurfNews #ENGvsIND #England #TeamIndia #GautamGambhir #JaspritBumrah #Cricket pic.twitter.com/VRjPkZvsbO
— OneTurf News (@oneturf_news) June 25, 2025
லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்தினார். தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், ஸ்கோர்லைன் காரணமாக அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்தார். அப்போது அவர், “பும்ரா எந்த இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் இந்த தொடரில் அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். நாங்கள் அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பரிசளிப்பு விழாவில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பும்ராவை பற்றி பேசுகையில், ”ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்ப அது தீர்மானிக்கப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அடுத்த போட்டிக்கு அருகில் வரும்போது பார்ப்போம். இரண்டாவது டெஸ்ட் வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதை அங்குள்ள சூழ்நிலைகளைப் பார்த்து அணி நிர்வாகம் முடிவு செய்யும்.” என்று தெரிவித்தார்.
முதல் இன்னிங்ஸில் கலக்கிய பும்ரா:
முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் போது, அவரது பந்துகளில் சில கேட்சுகள் தவறவிடப்படாவிட்டால், அவரது விக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், பும்ரா அணியை முற்றிலும் ஏமாற்றி, ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக, இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி 364 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் பின்னர், 371 ரன்கள் என்ற இலக்கை துரத்த வந்த இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.