பெங்களூரு கூட்ட நெரிசல் விபத்து.. முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது காவல் நிலையத்தில் புகார்!
Bengaluru Stampede : பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஐபிஎல் (IPL) வரலாற்றில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4, 2025 அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் விராட் கோலி (Virat Kohli) உட்பட ஆர்சிபி வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் தோன்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த வெற்றி சோகமாக மாறியது, ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டங்களைக் காண அதிக எண்ணிக்கையில் திரண்டனர். மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரியான முன்னேற்பாடுகள் இன்றி இந்த விழா ஏற்பாடு செய்திருந்ததாகவும் இதன் காரணமாகவே ஏராளமான மக்கள் திரண்டதாகவும் கர்நாடக அரசை பாஜக உட்பட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது காவல்நிலையத்தில் புகார்
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான சினேகமாய் கிருஷ்ணா என்பவர், அம்மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகார் மனுவில் அரசியல் ஆதாயத்திற்காக பொதுமக்களை பயன்படுத்துவது, விதான சவுதா மற்றும் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் வெற்றியைக் கொண்டாட அவசர முடிவு மற்றும் முறையான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் 11 பேர் உயிரிழந்தாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.




பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய விராட் கோலி
#WATCH | Virat Kohli praises #RoyalChallengersBengaluru captain Rajat Patidar as RCB ended their 18-year-long wait and won their maiden IPL trophy yesterday after defeating Punjab Kings
“He will lead us for a long time,” says Virat Kohli
(Visuals from M Chinnaswamy Stadium in… pic.twitter.com/V1W8GrR5Qg
— ANI (@ANI) June 4, 2025
மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கர்நாடக மாநில கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 106 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் கர்நாடக அரசின் அலட்சிய போக்கை கண்டித்து, பிரபல வழக்கறிஞர் நடராஜ சர்மாவும் விதான சவுதா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் 56 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 46 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் எனவும் மீதமுள்ள 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.