கோயிலுக்கு செல்பவர்களா நீங்கள்? – தயவு செய்து இந்த தப்பை பண்ணாதீங்க!
கோவிலுக்குச் சென்ற பின்னர் சில செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் கை, கால், முகம் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும். அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தால், முதலில் அங்கு சென்று பின்னர் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆன்மிகம் என்பது ஒவ்வொரு மனிதர்களிடையேயும் வெவ்வேறு வகையான எண்ணங்களை கொண்டிருக்கிறது. இறை பக்தி என்பது ஒவ்வொரு கடவுளிடத்திலும் வேறுபடுகிறது. ஆனால் கடவுள் குடிகொண்டிருக்கும் கோயில்கள் மீதான எண்ணம் மட்டும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். கோயில்களுக்கு சென்றால் மன அமைதி கிடைக்கும், வீண் குழப்பங்கள் நீங்கும், பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்கும், நமக்கான ஆறுதலாக கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை தோன்றும் அளவுக்கு முழுக்க முழுக்க இறைசக்தி நிறைந்த இடமாக கோயில்கள் திகழ்கிறது. அங்கிருக்கும் அமையும், இறை உணர்வும் நிச்சயம் மனதில் ஒரு மாற்றம் ஏற்படுத்துவதை நம்மால் உணர முடியும். இப்படியான கோயில்கள் சிறியது முதல் பெரியது வரை நம்மை சுற்றிலும் அமைந்துள்ளது. இப்படியான வழிபாட்டு தலங்களுக்கு சென்று வரும்போது நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
பெரும்பாலானவர்கள் கோயிலுக்கு செல்வதை தினசரி கடமையாக வைத்திருப்பார்கள். சிலர் வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் இறை வழிபாடு என்பது அனைத்து மதத்திலும் தினசரி இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது. சிலர் கோயிலுக்கு சென்று வரும்போது பல்வேறு காரியங்களில் ஈடுபடுகின்றனர். தெரிந்தும், தெரியாமலும், அவசர சூழலிலும் இத்தகைய செயல்களை மேற்கொள்ளலாம். ஆனால் இதையெல்லாம் செய்யக்கூடாது என சாஸ்திரங்கள் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளது அதனை பற்றி நாம் காணலாம்.
- முதலாவதாக, வெளியில் சென்று விட்டு வந்த பிறகு கை, கால், முகம் கழுவும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இது நல்ல பழக்க வழக்கம் என்றாலும் அதனை கோயிலுக்கு சென்று விட்டு வந்த பிறகு மேற்கொள்ளக்கூடாது. கோயிலில் இருந்து வீட்டிற்கு வரும் நம்மிடம் இறை சக்தி என்பது இருக்கும் என்றும், அது வீட்டில் தங்குவதற்கு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது.
- அதேசமயம் சிலர் கோயிலுக்கு சென்று விட்டு அதன் அருகில் இருக்கும் உறவினர்கள் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஒருவேளை அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால் முதலில் அங்கு சென்று விட்டு பின் கோயிலுக்கு வந்து வழிபாடுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். ஒருவேளை தொலைதூரக் கோயில்களுக்கு சென்றால் இதனை கருத்தில் கொள்ள வேண்டாம்.
- சிலர் கோயிலில் வழங்கப்படும் விபூதி குங்குமம் போன்ற பிரசாதங்களை அப்படியே ஒரு பேப்பரில் மடித்து வீட்டில் கண்ட இடத்தில் வைத்துவிட்டு தங்களது வேலையை பார்க்க சென்று விடுவார்கள். அப்படி செய்யக்கூடாது ஒன்று அந்த விபூதி குங்குமம் பூஜை அறையில் இருக்க வேண்டும் அல்லது அதற்கான பாட்டிலில் போடப்பட்டிருக்க வேண்டும்.
- அதேபோல் கோயிலுக்கு தான் சென்று வந்து விட்டோமே அசைவம் சாப்பிடலாம் என சிலர் பின்பற்றி வருகிறார்கள். அப்படி செய்யக்கூடாது. அன்று ஒரு நாள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் கோயிலை சுற்றி வரும் போது நம்முடைய உடலானது ஆற்றலை இழந்து பசியை தூண்டும் அளவிற்கு சென்று விடும். அப்படி சூழல் வந்தாலும் நீர் ஆதாரங்கள் பருகி பின்னர் சிறிது நேரம் கழித்து உணவு எடுத்துக் கொள்ளலாம்.
- சிலருக்கு கோயிலுக்கு சென்று வந்தவுடன் வீட்டில் டிவி பார்ப்பது, செல்போன் உபயோகிப்பது போன்ற பழக்கங்கள் ஏற்படுகிறது. அப்படி செய்யாமல் நேராக வீட்டிற்கு வந்தவுடன் பூஜையறையில் நின்று சில நிமிடங்கள் பிரார்த்தனை மேற்கொண்ட பிறகு மற்ற வேலைகளை கவனிக்கலாம்.
இவற்றையெல்லாம் செய்யும்போது இறைசக்தி நம்முடனும், நம் வீட்டிலும் நிறைந்திருக்க வாய்ப்புள்ளதாக சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)