சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இலவச பேருந்து இயக்கம்!
Tiruvannamalai Girivalam Free Buses: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலத்தையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் சுமார் 100- க்கும் மேற்பட்ட இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்கள் முதல் கிரிவல பாதை வரை இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் வருகிற மே 1- ஆம் தேதி சித்ரா பௌர்ணமியையொட்டி, நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் கிரிவலம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 30) முதல் மே 2- ஆம் தேதி ( சனிக்கிழமை) வரை லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பேருந்துகள் கால நேர அட்டவணை இன்றி தொடர்ச்சியாக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
100- க்கும் மேற்பட்ட தனியார் இலவச பேருந்துகள்
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 100 கல்வி நிறுவனங்கள் சார்பில் தங்களது பேருந்துகளை கட்டணம் இல்லாமல் பயணிகளை அழைத்து வருவதற்கு இயக்க முன் வந்துள்ளது. இதை தவிர்த்து ரூ.10 கட்டணத்தில் 100 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று இனாம்காரியந்தல் மற்றும் செங்கம் சுங்க சாவடிகளில் இலவச பேருந்துகள், வழித்தட பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளுக்கு சொந்த கட்டணத்திலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பேருந்துகள் தனி பாதையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!




கியூஆர் குறியீட்டுடன் கூடிய ஆட்டோக்கள் இயக்கம்
சித்ரா பௌர்ணமி நாளில் கியூஆர் குறியீடு ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இயக்கப்படும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக 30 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் 20 போக்குவரத்து துறை பணியாளர்கள் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதிக்காக குடிநீர், கழிவறை, பக்தர்கள் அமருமிடம், அன்னதானம் வழங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்
மேலும், திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பகுதி மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக மேற்கண்ட இடங்களில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் ஆகியவை அகற்றப்பட்டன. அதோடு மட்டுமின்றி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சித்ரா பெளர்ணமி தினத்தையொட்டி, திருவண்ணாமலை திருவிழா கோலம் பூண்டுள்ளது.
மேலும் படிக்க:நரசிம்மர் ஜெயந்தி 2026: வரலாறு…. வழிபாட்டு பலன்கள்…!