கொளத்தூர் தொகுதியில் 3 முறை வெற்றி வாகை சூடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
Dmk Leader M. K. Stalin: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 4 முறையும், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 3 முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தின் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமாக இருந்து வருபவர் மு. க. ஸ்டாலின். இவர் கடந்த 1953- ஆம் ஆண்டு மார்ச் 1- ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி மற்றும் தயாளு அம்மாளுக்கு 3- ஆவது மகனாக பிறந்தார். இவர், கடந்த 1967- ஆம் ஆண்டு தனது 14- ஆவது வயதில் தனது தாய்மாமன் முரசொலி மாறனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதைத்தொடர்ந்து 1973- ஆம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

பின்னர், தனது தீவிர அரசியலை முன்னெடுத்து 1982- ஆம் ஆண்டு கோபாலபுரம் இளைஞரணியை உருவாக்கி அதனை மாநிலம் தழுவிய இளைஞர் அணியாக மாற்றியதுடன், அதன் செயலாளராக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல் முறையாக கடந்த 1984-ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1989- இல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996- ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு 2-ஆவது வெற்றியை பதிவு செய்தார்.

கடந்த 2003- ஆம் ஆண்டு திமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை மு.க ஸ்டாலின் பெற்றாா். அதன்படி, கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2002- ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் 37- ஆவது மேயராக பொறுப்பும் வகித்துள்ளார். பின்னர், 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், 2009- ஆம் ஆண்டு மே 29- ஆம் தேதி முதல் 2011 ஆம் ஆண்டு மே 15- ஆம் தேதி வரை துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இவ்வாறாக அவரது அரசியல் வாழ்க்கை நகர்ந்து வந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28- ஆம் தேதி திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மறைவை தொடர்ந்து, கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த 1984- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முதல் 2006-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில், 4 முறை வெற்றியும், 2 முறை தோல்வியும் அடைந்துள்ளார். இதற்குப் பிறகு, கடந்த 2011- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதல் 2021 சட்டமன்ற தேர்தல் வரை கொளத்தூர் தொகுதியில் மாறி போட்டியிட்டார். இதில், அனைத்திலும் அவருக்கு வெற்றி கிட்டியது.

தற்போது வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அவர் இதே தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை விட 60.86 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இதனால், வரும் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை பொறுத்து களம் மாறும் நிலை உள்ளது.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர் 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.