Remove Yellow Stains: வெள்ளை துணிகளில் வியர்வையால் மஞ்சள் கறையா..? நீக்க எளிய 3 குறிப்புகள்..!
Whiten White Clothes: கோடை காலத்தில் வெள்ளை ஆடைகளில் ஏற்படும் மஞ்சள் கறைகளை எளிதாக நீக்குவதற்கான 3 வழிமுறைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. சமையல் சோடா, எலுமிச்சை சாறு, வெள்ளை வினிகர் ஆகியவற்றைப் பயன்படுத்தி எப்படி கறைகளை அகற்றி ஆடைகளின் பளபளப்பை மீட்டெடுக்கலாம் என்பதை விரிவாக விளக்குகிறது. இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி ஆடைகளை சுத்தம் செய்வது பற்றியும் இக்கட்டுரை வழிகாட்டுகிறது.

கோடை காலத்தில் (Summer) வியர்வை என்பது பொதுவான பிரச்சனைதான். இதனால், கோடை காலத்தில் சிலர் ஒரு குறிப்பிட்ட ஆடைகளை அணிய தயக்கம் கொள்வார்கள். அதில், வெள்ளை நிற ஆடைகளும் ஒன்று. கோடைக்காலத்தில் என்னதான் உள்ளாடைகள் அணிந்தாலும், வெள்ளை நிற உடைகள் அதிகபடியான வியர்வையால் (Sweat) மஞ்சள் நிறமாக தொடங்கும். எவ்வளவு முறை துவைத்தாலும், இத்தகைய வெள்ளை நிற ஆடைகளில் படியும் மஞ்சள் கறைகளை நீக்குவது கடினமாகிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், வெள்ளை ஆடைகளின் (White Clothes) இழந்த பளபளப்பை மீண்டும் கொண்டு வந்து, மஞ்சள் நிற கறைகளை எப்படி நீக்குவது என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
வெள்ளை ஆடைகள் ஏன் மஞ்சள் நிறமாக மாறுகிறது..?
வெள்ளை ஆடைகள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு பல அறிவியல் மற்றும் நடைஉறை காரணங்கள் உள்ளன. அதாவது, வியர்வையில் உள்ள உப்பு, யூரியா மற்றும் புரதம் ஆகியவை தோலில் காணப்படும் பாக்டீரியாக்களுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிந்து, வெள்ளை நிற ஆடைகள் மீது மஞ்சள் கறைகளை உருவாக்குகிறது. அதேநேரத்தில், டியோடரண்டில் உள்ள அலுமினியம் மற்றும் துணிகளில் பயன்படுத்தப்படும் சில ரசாயனங்களும் இந்தக் கறைகளை ஊக்குவிக்கின்றன. படிப்படியாக, தூசி, எண்ணெய் மற்றும் தவறான துவைத்தல் காரணமாக துணிகளின் வெண்மை குறைகிறது.
மஞ்சள் கறைகளை நீக்குவது எப்படி..?
சமையல் சோடா:
சமையல் சோடா மிகவும் சக்திவாய்ந்த இயற்கை சுத்திகரிப்பானாக பார்க்கப்படுகிறது. இது வியர்வை கறைகளை நீக்கவும், ஆரோக்கியத்தில் துர்நாற்றத்தை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். சமையல் சோடா துணிகளின் நூல்களில் உள்ள கறைகளை நீக்கி அவற்றின் பளபளப்பை மீண்டும் கொண்டு வரும். முதலில் துணிகளை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் சமையல் சோடாவை கலக்கவும். இந்த கரைசலில் துணிகளை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு, சாதாரண சோப்பை போட்டு துவைத்தால் மஞ்சள் கறைகள் நீங்கி, துணிகள் பளபளக்கும்.




எலுமிச்சை சாறு:
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கறைகளை உடைத்து துணிகளை பிரகாசமாக்க உதவுகிறது. பழைய கறைகளை நீக்குவதற்கு இதற்கு சிறந்த சான்றிதழ்களையே கொடுக்கலாம். இதற்காக, ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலக்கவும். இந்த கலவையை கறை படிந்த இடத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே சூரியனில் படும்படி வைக்கவும். சூரிய கதிர்கள் எலுமிச்சையின் ப்ளீச்சிங் விளைவை அதிகரிக்கும் என்பதால், துணிகளை வெயிலில் உலர வைக்கவும். இறுதியாக, துணிகளை துவைக்கவும்.
வெள்ளை வினிகர்:
வெள்ளை வினிகர் துணிகளில் இருந்து கறைகளை நீக்குவது மட்டுமல்லாமல், அவற்றிற்கு தேவையான வெண்மையை கொடுக்கும். இது வியர்வை மற்றும் டியோடரண்டால் ஏற்படும் கறைகளை திறம்பட நீக்குகிறது. இதற்காக, வாஷிங் மெஷினில் கடைசியாக ஒரு கப் வெள்ளை வினிகரைச் சேர்க்கவும். கையால் துவைத்தால், கடைசியாக துவைக்கும் தண்ணீரில் அரை கப் வினிகரைச் சேர்க்கவும். துவைத்த பிறகு துணிகளை வெயிலில் உலர வைக்கவும். வினிகரானது துணிகளை மென்மையாக வைத்திருக்கும். மேலும், நீண்ட நேரம் அவற்றின் வெண்மையை பராமரிக்கும்.