தடைகளைத் தகர்த்து காதலனை கரம் பிடித்த “கும்பமேளா புகழ் மோனலிசா”.. கேரளாவில் அரங்கேறிய நிஜ “கேரளா ஸ்டோரி”..
‘Kumbh Mela Girl’ Monalisa Bhosle Marries Boyfriend: காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, கேரளாவின் பாதுகாப்பான சூழலில் திருமணம் செய்துகொள்ள இந்த ஜோடி முடிவு செய்தது. அதன்படி, நேற்றைய தினம், திருவனந்தபுரம் அருகே உள்ள பூவாரில் உள்ள கோவிலில் இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருவனந்தபுரம், மார்ச் 12: கடந்த 2025ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது, ருத்ராட்ச மாலைகளை விற்றுக்கொண்டிருந்த இளம்பெண் மோனலிசா போஸ்லேவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. தனது வசீகரமான காந்தக் கண்ணழகால் ‘கும்பமேளா அழகி’ என்று அழைக்கப்பட்ட இவர், தற்போது தனது காதலரான ஃபர்மான் கானை கேரளாவில் வைத்து கரம் பிடித்துள்ளார். இந்தத் திருமணமானது மத எல்லைகளைக் கடந்தும், குடும்ப எதிர்ப்புகளை மீறியும் நடைபெற்றுள்ளதால் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிக்க : போர் சூழல்.. விலையேறும் விமான டிக்கெட்.. ஏர் இந்தியா சொன்ன முக்கிய விவரம்!
காதலாக மலர்ந்த பேஸ்புக் நட்பு:
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவுக்கும், நடிகர் மற்றும் மாடலான ஃபர்மான் கானுக்கும் இடையே சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் நட்பு உருவானது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மோனலிசாவின் குடும்பத்தினர் அவரது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, நிற்காமல் மோனலிசாவின் தந்தை ஜெய்சிங் போஸ்லே, உடனடியாக தனது மகளுக்குத் தங்களுக்குத் தெரிந்த ஒரு உறவினருடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் தஞ்சம் புகுந்த மோனலிசா:
இதனிடையே, சமீபத்தில் மோனலிசா ‘நாகம்மா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதற்காகக் கேரளா சென்றிருந்தார். அங்கேயும் அவரது தந்தை வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மோனலிசா மற்றும் ஃபர்மான் கான் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பனூர் காவல் நிலையத்தை அணுகி பாதுகாப்பு கோரினர். இந்த விவ்வகாரம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மோனலிசா 18 வயது நிறைவடைந்த பெண் என்பதால், அவர் தனது விருப்பப்படி வாழ உரிமை உண்டு என்று கூறி, அவரை காதலருடன் செல்ல அனுமதித்தனர்.
கோவிலில் நடந்த திருமணம்:
View this post on Instagram
இதையடுத்து, காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, கேரளாவின் பாதுகாப்பான சூழலில் திருமணம் செய்துகொள்ள இந்த ஜோடி முடிவு செய்தது. அதன்படி, நேற்றைய தினம் (மார்ச் 11), திருவனந்தபுரம் அருகே உள்ள பூவாரில் உள்ள ஸ்ரீ நைனார் தேவா (அருமானூர்) கோவிலில் இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, மோனலிசா சிவப்பு நிறப் புடவையிலும், ஃபர்மான் கான் கேரள பாரம்பரிய வெள்ளை சட்டை மற்றும் முண்டு அணிந்தும் காட்சியளித்தனர். ஃபர்மான் கான் மோனலிசாவுக்குத் தாலி கட்டி, நெற்றியில் குங்குமம் இட்டுத் திருமணத்தை இந்துச் சடங்குகள்படி நடத்தினார்.
முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு:
இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இதுவே “உண்மையான கேரளா ஸ்டோரி” (Real Kerala Story) என்று அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
மணமக்களின் நெகிழ்ச்சி:
திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணமகன் ஃபர்மான் கான், “எங்கள் காதல் கதை ஆறு மாத காலமானது தான் என்றாலும், அது அறுபது ஆண்டுகள் போல உணர வைக்கிறது. கேரளா மக்கள் மிகவும் அன்பானவர்கள், இங்கு மதப் பாகுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதால் இந்த மாநிலத்தை நாங்கள் திருமணத்திற்காகத் தேர்ந்தெடுத்தோம்” என்றார். மோனலிசாவும் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சிலிண்டர் சிக்கல்.. அமலானது அத்தியாவசிய பொருட்கள் சட்டம்.. இனி என்ன நடக்கும்?
அதேசமயம், மோனலிசாவின் வயது குறித்துச் சமூக வலைதளங்களில் சில சர்ச்சைகள் கிளப்பப்பட்டாலும், காவல்துறையினர் அவர் வயது வந்தவர் என்பதை உறுதி செய்த பின்னரே இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.