Tamil Nadu Adult Literacy: வயது வந்தோர் கல்வி திட்டம்.. 100 சதவீத தேர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம்!

Adult Education Program India: மத்திய அரசின் உல்லாஸ்-நவ பாரத் சாக்ஷார்த்த காரியக்ரமத்தின் கீழ் நடத்தப்பட்ட வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு, எண் மதிப்பீட்டுத் தேர்வில் (FLNAT) தமிழ்நாடு 100% தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திரிபுரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு வழங்கப்படுகிறது.

Tamil Nadu Adult Literacy: வயது வந்தோர் கல்வி திட்டம்.. 100 சதவீத தேர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம்!

வயது வந்தோர் கல்வி திட்டம்

Updated On: 

03 Jun 2025 15:50 PM

டெல்லி, ஜூன் 3: மத்திய அரசின் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சியுடன் தமிழ்நாடு (Tamil Nadu) முதலிடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாடு, திரிபுரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் சிறந்த செயல்திறனை மேம்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் உத்தரகண்ட், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் 85 சதவீதத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. உல்லாஸ் – நவ பாரத் சாக்ஷார்த்த காரியக்ரமின் (ULLAS – Nav Bharat Saaksharta Karyakram) கீழ் நடத்தப்பட்ட 2024-25 அடிப்படை எழுத்தறிவு, எண் மதிப்பீட்டுத் தேர்வு (FLNAT), சான்றிதழ் தரவைச் சமர்ப்பித்த மாநிலங்களிடையே ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

என்ன திட்டம் அது..?

15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்கள் அனைவருக்கும் அடிப்படை கல்வி அறிவு மற்றும் எழுத்தறிவு புகட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, புதிய பாரத எழுத்தறிவு (உல்லாஸ் – நவ பாரத் சாக்ஷார்த்த காரியக்ரம்) திட்டத்தை மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வடுகிறது. அதில், தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் அடிப்படை கல்வி அறிவு புகுத்தும் பணி நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2024-25ம் ஆண்டில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து கல்வி பயின்றுள்ளனர். இதில், வயது வந்தோர் அடிப்படை கல்வி மற்றும் எண் கணித திறன் மதிப்பீட்டு தேர்வில் கல்வி பயின்ற அனைவரும் தேர்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கு தேர்வு:

நாடு முழுவதும் இந்த திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 77 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில், 34.3 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2025 மே மாதத்திற்குள் 34.3 லட்சம் பேருக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேசிய சராசரி சுமார் 19.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த சராசரி முழுமையானது அல்ல என்று கூறப்படுகிறது. கடந்த 2025 மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அடுத்த கட்டத்திலிருந்து சுமார் 49 லட்சத்திற்கும் அதிகமான தேர்வாளர்களை உள்ளடக்கிய தரவு இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில், “ FLNAT இன் கீழ், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் படிக்கவோ. எழுதவோ தெரியாத வயது வந்தோரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்குகின்றன. பின்னர் அவர்களின் கல்வி முன்னேற்றத்தை அளவிட ஒரு தேர்வும் நடத்தப்படுகிறது.

வலுவான நிர்வாக மேற்பார்வை, தேர்வுக்கு முந்தைய தயாரிப்பு மற்றும் சமூக தன்னார்வலர்கள் மற்றும் பஞ்சாயத்து ஆதரவு மூலம் உள்ளூர் அணிதிரட்டல் இதற்குக் காரணம்” என்று தெரிவித்தார்.

எந்த மாநிலங்களில் அதிகளவில் முன்னேற்றம்..?

தமிழ்நாட்டில் 5,09,694 தேர்வாளர்கள் தேர்வு எழுதி 100% வெற்றி விகிதத்தைப் பதிவு செய்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், திரிபுரா 13,909 தேர்வாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி 98.1% வெற்றி விகிதத்துடன் 2வது இடத்தையும், டெல்லியில் 7,959 தேர்வாளர்களில் 7,901 பேருக்கு சான்றிதழ் வழங்கி, 99.3% வெற்றி விகிதத்தை பெற்று 3வது இடத்திலும் உள்ளது.