வாட்ஸ்அப்பில் ‘பயனர் பெயர்’ வசதி.. சைபர் மோசடி அபாயம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு..
இந்த வசதி அமலுக்கு வந்தால் சைபர் மோசடிகள் அதிகரிக்கக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, இந்த வசதி செயல்படுத்தப்பட்டால் வாட்ஸ்அப்பும் டெலிகிராம் செயலியைப் போன்ற தன்மையை பெறும் என்றும், யார் வேண்டுமானாலும் போலி அடையாளத்தில் தகவல்களை பரப்பும் அபாயம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜூலை 1, 2026: வாட்ஸ்அப்பில் தொலைபேசி எண்ணுக்கு பதிலாக ‘பயனர் பெயர்’ (Username) மூலம் தொடர்புகொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விரிவாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய வசதி மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வாட்ஸ் அப் புதிய வசதி – மத்திய அரசு விரிவான ஆய்வு:
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், பயனர் பெயர் வசதி அறிமுகமானால் ஆள்மாறாட்டம், போலி கணக்குகள் மூலம் மோசடி, அடையாள மறைவு உள்ளிட்ட சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தன. தேவைப்பட்டால் இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பயனர்களின் தொலைபேசி எண் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய வசதியை மெட்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 300 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை பகிராமல் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்பதே இந்த வசதியின் முக்கிய நோக்கமாக மெட்டா தெரிவித்துள்ளது.
சைபர் மோசடிகள் அதிகரிக்கும் அபாயம்:
ஆனால், இந்த வசதி அமலுக்கு வந்தால் சைபர் மோசடிகள் அதிகரிக்கக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, இந்த வசதி செயல்படுத்தப்பட்டால் வாட்ஸ்அப்பும் டெலிகிராம் செயலியைப் போன்ற தன்மையை பெறும் என்றும், யார் வேண்டுமானாலும் போலி அடையாளத்தில் தகவல்களை பரப்பும் அபாயம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், சைபர் மோசடிகள், அவதூறு தகவல்கள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு குற்றவாளிகளை அடையாளம் காண்பது சிரமமாகும் என்றும், சைபர் குற்றவாளிகள் தங்களது உண்மையான அடையாளத்தை மறைப்பது எளிதாகிவிடும் என்றும் பல தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதிய ‘Username’ வசதி என்றால் என்ன?
பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை மற்றவர்களுடன் பகிராமல் வாட்ஸ்அப்பில் உரையாடுவதற்காக ‘Username’ என்ற புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது.
குறிப்பாக, குழு உரையாடல்களில் (Group Chat) அல்லது முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன் முதல் முறையாக தொடர்பு கொள்ளும் போது, தொலைபேசி எண்ணை பகிர விரும்பாதவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: எரிபொருள் மீதான தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கம்.. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு – மத்திய அமைச்சர் அறிவிப்பு
இந்த வசதியின் மூலம், வாட்ஸ்அப்பில் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை பயனர்களே தேர்வு செய்ய முடியும். அதிகபட்சம் 35 எழுத்துகள் வரை கொண்ட பயனர் பெயரை (Username) உருவாக்கும் வசதியும் வழங்கப்பட உள்ளது.
கல்லூரி மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிரபல அமைப்புகள் தங்களது பிராண்ட் பெயர் அல்லது சமூக வலைதளங்களில் பயன்படுத்தும் பயனர் பெயரையே வாட்ஸ்அப்பிலும் பயன்படுத்த முடியும். இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் அதே பயனர் பெயரை வாட்ஸ்அப்புடன் இணைக்கும் வசதியையும் மெட்டா வழங்க உள்ளது.
தனியுரிமைக்கு முன்னுரிமை:
பயனர்களின் தனியுரிமைக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பயனர்கள் அனுப்பும் தனிப்பட்ட செய்திகள், புகைப்படங்கள், குரல் பதிவுகள் உள்ளிட்ட அனைத்தும் ‘எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்’ (End-to-End Encryption) மூலம் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.
அதாவது, தகவலை அனுப்புபவரும் பெறுபவரும் தவிர வேறு யாராலும் அந்த உரையாடல்களை பார்க்க முடியாது. மேலும், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.