எரிபொருள் மீதான தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கம்.. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் முடிவு – மத்திய அமைச்சர் அறிவிப்பு
இதுகுறித்து மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் உச்சக்கட்ட காலத்தில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதாக தெரிவித்தார்.
ஜூலை 1, 2026: உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலைமை சீரடைந்து வருவதையடுத்து, பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி (LPG) எரிபொருள் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுப்பாடுகளை ஜூலை 1 முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் உயர்வேக டீசல் (High-Speed Diesel) கொள்முதல் வரம்பு நீக்கப்பட்டுள்ளதுடன், 19 கிலோ வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலையும் ரூ.183 வரை குறைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு:
இதுகுறித்து மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் உச்சக்கட்ட காலத்தில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதாக தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை எரிசக்தி நெருக்கடியின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது உலகளாவிய எரிசக்தி விநியோகம் சீரடைந்து வருவதால், ஜூலை 1 முதல் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும், இதன்படி எரிபொருள் நிலையங்களில் இருந்து நாளொன்றுக்கு 200 லிட்டர் உயர்வேக டீசல் மட்டுமே வாங்க முடியும் என்ற வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய நுகர்வோர் இனி குறிப்பிட்ட நுகர்வோர் எரிபொருள் நிலையங்களில் மட்டுமல்லாமல், எந்த எரிபொருள் நிலையத்திலிருந்தும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்க முடியும் என்றும் கூறினார்.
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை குறைப்பு:
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், 19 கிலோ வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.183 வரை குறைக்கப்பட்டிருப்பதால் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தெலங்கானா மக்களின் சார்பில், பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் இந்த முடிவுகளை எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த ஜி. கிஷன் ரெட்டி, கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்றும், பெட்ரோல் மற்றும் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அச்சத்தை ஏற்படுத்த முயன்றதாக குற்றம்சாட்டினார்.
பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை:
ஆனால், ஹோர்முஸ் நீரிணை நான்கு மாதங்கள் மூடப்பட்டிருந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும், ஒரு பெட்ரோல் நிலையத்திலும் எரிபொருள் தீரவில்லை என்றும், எந்தக் குடும்பமும் எல்பிஜி சிலிண்டர் இல்லாமல் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,600 ஆக இருந்தபோதும், இந்தியாவில் அது சுமார் ரூ.900 என்ற மலிவு விலையில் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா–உக்ரைன் போர், மேற்கு ஆசிய நெருக்கடி உள்ளிட்ட அனைத்து சவால்களையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திறம்பட சமாளித்துள்ளதாகவும், நெருக்கடியான காலங்களில் மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளித்து செயல்பட்டதே அரசின் சிறப்பம்சம் என்றும் ஜி. கிஷன் ரெட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.