பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர்.. சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்!

Rajasthan Govt official arrest of spying Pakistan : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஷகுர் கான் மங்கானியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தான் தூதுரக அதிகாரி ஒருவரிடம் தொடர்பில் இருப்பதாகவும், 7 முறை பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர்.. சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்!

மாதிரிப்படம்

Updated On: 

29 May 2025 14:49 PM

ராஜஸ்தான், மே 29 : பாகிஸ்தானுக்கு உளவு (pakistan spy) பார்த்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த அரசு ஊழியர் (rajasthan goverment official Arrest) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை ஜெய்சால்மரில் அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஊழியர் ஷகுர் கான் மங்கானியர் என அடையாளம் காணப்பட்டார். அவரை ஜெய்சால்மரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது வட மாநிலங்களில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமீப நாட்களில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, யூடியூப் பிரபலம் ஜோமி மல்ஹோத்ரா தொடங்கி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது

அதைத் தொடர்ந்து, டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஷகுர் கான் மங்கானியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ராஜஸ்தானில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தானி பகுதியைச் சேர்ந்தவர்.

ஜெய்சால்மரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு அரசு ஊழியராக, எந்தவொரு சர்வதேசப் பயணத்திற்கும் முன் குறிப்பாக பாகிஸ்தான் போன்ற ஒரு முக்கியமான நாட்டிற்குச் செல்வதற்கு முன்,  துறை அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.

7 முறை பாகிஸ்தான் சென்றார்


ஆனால், கைதான ஷகுர் கான்  எந்த ஒரு அனுமதியின்றி 7 முறை பாகிஸ்தானுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கானின் சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக அதிகாரிகள்  சமீப நாட்களில் கண்காணித்து வந்த நிலையில், 2025 மே 28ஆம் தேதியான நேற்று கைது செய்தனர். மேலும், கான் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் தொடர்பில் இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான ஷகுர் கான், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஷேல் முகமதுவின் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “பாகிஸ்தான் வழிபாடு காங்கிரஸின் இரத்தத்தில் ஊறியுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர்

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும்,  பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக  இந்தியா குற்றச்சாட்டியது. அதைத் தொடர்ந்து,  பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஆபரேஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது.

இதனை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் பதிடி தாக்குதல் நடத்தியது. இப்படியே மூன்று நாட்கள் நடந்த  நிலையில், 2025 மே 10ஆம்  தாக்குதல் நிறுத்தப்பட்டது. தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், பாகிஸ்தானுடன் வர்த்தகத்தையும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.