எல்லை பிரச்னைக்கான தீர்வு – சீன அதிபரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
PM Modi Meets Chinese President : டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது எல்லைப் பகுதிகளில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவது, இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படை என பிரதமர் வலியுறுத்தினார்.
டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 12, 2026 இன்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா-சீனா உறவுகளை நீண்ட காலத்துக்கான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர்.
சீன அதிபரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள், பிரச்னைகளாக மாறக்கூடாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா மற்றும் சீனா உறவுகள் பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வுப்பூர்வ அணுகுமுறை, பரஸ்பர நலன் என்ற 3 அம்சங்களின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைப் பகுதிகளில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவது, இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படை என பிரதமர் வலியுறுத்தினார். ஏற்கனவே செய்யப்பட்டுள்ள எல்லை தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளை இரு தரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, சமமான மற்றும் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை நீண்டகால நலன்களை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான அணுகுமுறையுடன் எட்ட வேண்டும் என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
#WATCH | Delhi: During the bilateral meeting with PM Narendra Modi, Chinese President Xi Jinping said, “In the face of a complex international landscape marked by intertwined changes and challenges, China and India, as the world’s two most populous countries and important members… pic.twitter.com/MZff4EpQ6F
— ANI (@ANI) September 12, 2026
இந்தியா மற்றும் சீனா இடையேயான மக்கள் தொடர்பு, கலாசார பரிமாற்றம், வர்த்தக உறவுகள் மற்றும் பயண வசதிகளை மேலும் அதிகரிப்பது குறித்தும் இரு தரப்பும் ஆலோசித்தனர். பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில், வர்த்தக சமநிலையின்மை, விநியோகச் சங்கிலி பிரச்னைகள் மற்றும் சந்தை அணுகல் தொடர்பான இரு நாடுகளின் கவலைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இரு நாடுகளும் பொதுவான அணுகுமுறையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், பல்வேறு சவால்களை இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்புக்கு சீனா அளித்த ஆதரவுக்கும், 2026 பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் வெற்றிக்கு வழங்கிய பங்களிப்புக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.