மத்திய கிழக்கு போர்.. பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
தற்போது மத்திய கிழக்கு பகுதியில் (மேற்கு ஆசியா) தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், இந்த மோதலால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தங்களது விரிவான மதிப்பீடுகளைப் பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.
டெல்லி, ஜுன் 06: உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஸ்திரப்படுத்துவது குறித்த ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கி நடத்தினார். புதுடெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PM-EAC) உறுப்பினர்கள் மற்றும் மூத்த பொருளாதார வல்லுநர்கள் பங்கேற்றனர். சமீபத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக உயர்ந்து நாட்டின் பொருளாதார வலிமையை நிரூபித்துள்ள நிலையில், இந்த வளர்ச்சியைத் தொய்வின்றி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்தே இந்த அவசரக் கூட்டம் முக்கியமாக கவனம் செலுத்தியது.
இதையும் படிக்க: இந்தியப் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகம்: 2025-26ல் 7.7% ஜிடிபி வளர்ச்சி
மத்திய கிழக்கு நாட்டு மோதல்களும் இந்திய பொருளாதாரமும்:
தற்போது மத்திய கிழக்கு பகுதியில் (மேற்கு ஆசியா) தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், இந்த மோதலால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தங்களது விரிவான மதிப்பீடுகளைப் பிரதமரிடம் சமர்ப்பித்தனர். குறிப்பாக போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருவது, இந்தியாவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சவாலாக மாறியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான உத்திகள் மற்றும் சந்தை ஸ்திரத்தன்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொழில் மற்றும் மக்கள் வாழ்வாதார மேம்பாடு:
உலகளாவிய பொருளாதாரக் கொந்தளிப்பில் இருந்து இந்தியாவைப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, உள்நாட்டுச் சீர்திருத்தங்களை வேகப்படுத்தவும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தொழில்துறைக்கான விதிமுறைகளை மேலும் எளிமையாக்குவது மற்றும் செயல்முறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. நாட்டின் 140 கோடி மக்களின் அன்றாட வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் தேவையான புதிய கொள்கை வடிவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: PM Modi : நேருவின் பத்தாண்டு கால சாதனையை முறியடிக்கப்போகும் பிரதமர் மோடி.. ஜூன் 10 நடக்கப்போகும் சாதனை என்ன?
இந்த ஆலோசனைக் கூட்டம், நாட்டின் 2025-26 நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி தரவுகள் வெளியான அடுத்த நாளிலேயே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக இருப்பதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தாலும், சர்வதேசப் போர்ச் சூழல் நாட்டின் நிதிநிலையைப் பாதிக்காமல் இருக்க அரசு இந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.