புதிய விதிமுறை: இனி 2 வீலர்களில் ஏபிஎஸ்… 2 ஹெல்மெட்கள் கட்டாயம்

Vehicle Safety Rule: இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி வருகிற 2026 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிமுறை: இனி 2 வீலர்களில் ஏபிஎஸ்... 2 ஹெல்மெட்கள் கட்டாயம்

மாதிரி புகைப்படம்

Published: 

21 Jun 2025 16:10 PM

இந்தியாவில் தினமும் நடைபெறும் சாலை விபத்துகளில் (Road Accident) ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சாலைப் பாதுகாப்பை அதிகரிக்க, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கடந்த ஜூன் 20, 2025 அன்று ஒரு மிகப் பெரிய முடிவை எடுத்துள்ளது.  அதன் படி ஜனவரி 2026 முதல், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய இரு சக்கர வாகனங்களும் (Bike), பைக்கின் எஞ்சின் திறனைப் பொருட்படுத்தாமல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) இல்லாமல் விற்கப்படக் கூடாது என்று அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தவிர, ஒவ்வொரு புதிய வாகனத்துடனும் டீலர்கள் இரண்டு BIS சான்றிதழ் கொண்ட தலைக்கவசங்களை (Helmets) வழங்குவது கட்டாயமாகும். ஒரு தலைக்கவசம் பைக்கை ஓட்டுபவர்களுக்கும் மற்றொரு ஹெல்மெட் பின்னால் உட்கார்ந்து வருபவருக்கும் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவு நாட்டில் சாலை விபத்துகளுக்கான ஆபத்தை குறைக்க உதவும். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் டேட்டாவின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகன விபத்துகளில் பிரேக் தொடர்பான பிரச்னை மற்றும் தலையில் ஏற்படும் காயங்கள் அடங்கும், இவற்றைக் குறைக்க புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நிதின் கட்கரி உத்தரவு

சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஏபிஎஸ் கட்டாயமாக்குதல் மற்றும் இரண்டு தலைக்கவச விதி ஆகியவை அடங்கும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாட்டில் இந்தப் புதிய விதிகள் நிறுவனங்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசிய பிறகு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை சாலை பாதுகாப்பு ஆதரவாளர்களால் வரவேற்கப்பட்டாலும், சில உற்பத்தியாளர்கள் குறைந்த விலை மாடல்களில் ஏபிஎஸ் வழங்குவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். இருப்பினும், விலைகளைக் குறைவாக வைத்திருப்பதை விட உயிர்களைக் காப்பாற்றுவது மிக முக்கியமானது என்று அரசு நம்புகிறது.

ஏபிஎஸ்-ன் நன்மை என்ன?

ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் இரு சக்கர வாகனங்களில் ஒரு பாதுகாப்பு அம்சமாக செயல்படுகிறது. இது திடீர் பிரேக்கிங் பயன்படுத்தப்படும்போது பைக் அல்லது கார் சறுக்குவதை தடுக்கிறது. நீங்கள் அதிவேகத்தில் பைக்கை ஓட்டும்போது திடீரென பிரேக் போடும்போது, ​​டயர் லாக் ஆகிவிடக்கூடும், அதாவது அது சுழலாமல் நின்றுவிடக்கூடும். இதனால் பைக் வழுக்கி விழலாம். இது நடப்பதை ABS தடுக்கிறது. நீங்கள் பிரேக்கைப் பயன்படுத்தும்போது, ​​டயர் லாக் ஆகத் தொடங்கினால், ஏபிஎஸ் ஒரு கணம் பிரேக்கைத் தளர்த்தி, பின்னர் மீண்டும் பிடிக்கிறது. இதன் காரணமாக சறுக்கி விழும் விபத்து குறைகிறது.