Aadhaar : இனி தட்கல் டிக்கெட்டுக்கும் ஆதார் கட்டாயம்.. ரயில்வே துறை அமைச்சர் அறிவிப்பு!
e-Aadhaar authentication to book Tatkal Tickets | தட்கல் டிக்கெட் முன்பதிவில் விரைவில் இ ஆதார் கார்டு பயன்படுத்தப்படும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் ஆதார் கார்டு (Aadhaar Card) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களின் அடையாள அட்டையாக ஆதார் உள்ள நிலையில், ஆதார் இல்லை என்றால் பல்வேறு வேலைகளை செய்ய முடியாத சூழல் தான் தற்போது நிலவுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஆதார் கார்டு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், மருத்துவ சிகிச்சைகள் வரை பல்வேறு இடங்களில் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு (Tatkal Ticket Booking) செய்யவும் இனி ஆதார் கட்டாயமாக உள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் போக்குவரத்து
இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ளனர். குறைவான கட்டணத்தில் அதிக தூரம் பயணிக்க ரயில்கள் சிறப்பான தேர்வாக உள்ள நிலையில், லட்சக்கணக்கான சாமானிய மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். நாள்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்த நிலையில், கடைசி நேர பயணங்களுக்காக தட்கல் டிக்கெட் முறையை இந்திய ரயில்வே பயன்பாட்டில் வைத்துள்ளது.
ஆனால், இந்த தட்கல் டிக்கெட் முறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) நீக்கியது. இந்த நிலையில், தட்கல் டிக்கெட்டில் நடைபெறும் மோசடிகளை குறைக்கும் வகையில் மேலும் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இனி தட்கல் டிக்கெட்டுக்கும் ஆதார் கட்டாயம் – அஸ்வினி வைஷ்ணவ்
Bharatiya Railways will soon start using e-Aadhaar authentication to book Tatkal tickets.
This will help genuine users get confirmed tickets during need.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 4, 2025
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தட்கல் டிக்கெட் முன்பதிவில் விரைவில் இ ஆதார் (e Aadhaar) பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேவையான பயனர்கள் எந்த வித சிக்கல்களும் இன்றி பயனடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.