இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நக்சலைட் சுட்டுக்கொலை – யார் இந்த பசவராஜு?

Most-Wanted Naxalite Falls : இந்தியாவில் 36 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் பசவராஜு பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து கொரில்லா போர் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நக்சலைட் சுட்டுக்கொலை - யார் இந்த பசவராஜு?

பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பசவராஜு

Published: 

27 May 2025 21:47 PM

 IST

மாவோயிஸ்ட் (Maoist) பயங்கரவாதத்தை முற்றிலும் வேறோடு அழிக்கும் நோக்குடன் தேசிய  பாதுகாப்புப் படைகள் நடத்திய மிக முக்கியமான நடவடிக்கையில், இந்தியாவில் (India)மிகவும் தேடப்பட்டு வந்த மோஸ்ட் வாண்டட் எனப்படும் நம்பாலா கேசவ ராவ் என்கிற பசவராஜு சுட்டு கொல்லப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த அபுஜ்மாட் காடுகளில் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கையில் பசவராஜுவை சுட்டு வீழ்த்தியதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018-ல் மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஜெனரல் செக்ரட்டரி பதவியை பெற்ற பசவராஜு, கடந்த 36 ஆண்டுகளாக காவல்துறையின் வலைகளில் சிக்காமல் தப்பித்து வந்தார். இவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு மத்திய அரசால் ரூ.1.5 கோடி வரை வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. பல குற்றப்புலனாய்வு அமைப்புகளும் இவரை பிடிக்க பல ஆண்டுகளாக முயற்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பசவராஜு?

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஜியன்னபேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜு. பள்ளி ஆசிரியரின் மகனான இவர், வாரங்கல்லில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்றார். 1980 ஆம் ஆண்டுகளில் மாணவர் பருவத்தில் தான் ராடிக்கல் ஸ்டூடன்ட் யூனியன், பீப்பிள்ஸ் வார் போன்ற மார்க்சிஸ்ட் அமைப்புகளுடன் சேர்ந்தார். 1984-ல் தனது எம்.டெக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழுமையாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஈடுபட்டார்.

விடுதலைப் புலிகளுடன் பயிற்சி

கடந்த 1987 ஆம் ஆண்டில் இலங்கையில்  விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சேர்ந்து கொரில்லா போர் பயிற்சி பெற்ற பசவராஜு, வெடிகுண்டுகள் செய்வதிலும், காடுளில் மறைந்திருந்து சண்டையிடுவதிலும் சிறந்த நிபுணராக உருவெடுத்தார். கடந்த 2010-ம் ஆண்டில் டாண்டேவாடாவில் 76 சிபிஆர்எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம், 2003-ல் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான வெடிகுண்டு முயற்சி உள்ளிட்ட பல  தாக்குதல் சம்பவங்களுக்கு பசவராஜு மூளையாக இருந்தார்.

24 நாட்கள் நீடித்த சண்டை

சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் எல்லை பகுதியான கரேகுட்டா மலைக்கிராமங்களில் 24 நாட்கள் வரை தொடர்ச்சியாக பசவராஜுவை பிடிக்க சண்டை நடைபெற்றது.  சுமார் 1,200 சதுர கிமீ காட்டுப் பகுதியில் நடந்த இந்த நடவடிக்கையில் 216 மாவோயிஸ்ட் முகாம்கள் கண்டறியப்பட்டன, 35-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 818 ஷெல்ல்கள், 899 வெடிகுண்டு கம்பிகள், பெரும்பாலான வெடிகுண்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பிரதமர்மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் இந்த நடவடிக்கையை “வரலாற்றில் மகத்தான வெற்றி” எனப் புகழ்ந்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் இந்த போராட்டத்தில் காட்டிய தைரியமிக்க முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மற்றும் பிற மாநிலங்களில் பாதுகாப்புப் படைகள் இப்போது மாவோயிஸ்ட் இயக்கத்தினை முற்றிலும் அழிக்கவும்,  2026 இறுதிக்குள் அதன் அனைத்து முக்கிய தலைவர்களையும் பிடிக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் அவர்கள் செயலாற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை