Demonetisation : ரூ.500 நோட்டுக்களை திரும்ப பெற வேண்டும், இதனால் ஊழலை ஒழிக்க முடியும் – சந்திரபாபு நாயுடு கோரிக்கை
Chandrababu Naidu Demands Withdrawal of 500 Notes : அந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெற்றது போல ரூ. 500 நோட்டுக்களையும் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வந்த பிறகு இவ்வளவு மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் தேவையற்றது என்றும் இதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் பேசினார்.

ஆந்திர (Andhra Pradesh) மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் (Telugu Desam Party) தலைவருமான சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) ஆந்திராவில் உள்ள கடப்பாவில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ரூ.500 போன்ற உயர்தர மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை முற்றிலும் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். நாட்டில் ஊழலைக் குறைத்து, முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றும் நோக்கத்துடன் இந்த கோரிக்கையை முன் வைப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊழலைக் குறைக்கும் முக்கிய கருவியாகும் என்ற அவர், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்க வேண்டும். இதனால், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடை குறித்து வெளிப்படைத்தன்மை கிடைக்கும் என்று பேசினார்.
ரூ.500 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற கோரிக்கை
முன்னதாக, 2016-ஆம் ஆண்டு ரூ.1,000 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்யும் முன்மொழிவை மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்ததாக கூறிய அவர், தற்போது ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார். இது, நாட்டில் ஊழலைக் குறைத்து, அரசியல் நிதிகளை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில், சந்திரபாபு நாயுடு மூன்று முக்கியக் கொள்கைகளான நலவாழ்வு, மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்கள் என்பதை வலியுறுத்தினார். மேலும் தெலுங்கு தேசம் கட்சி கடந்த 43 ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டது. ஆனால், எப்போதும் அதன் கொடிக்கொடி உயர்ந்தே இருந்தது என்றார்.
பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம்
இந்த மாநாட்டில், சந்திரபாபு நாயுடு, பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் போன்ற பல புதிய திட்டங்களை அறிவித்தார். இவை, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் இத்தகய அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்திருக்கின்றன.




மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசு உறுதியுடன் செயல்படும் எனவும், ஊழலை ஒழிக்கும் போராட்டம் தொடரும் என்றும் நாயுடு தெரிவித்தார். முன்னணி அதிகாரிகள் தொடர்பான பல முக்கிய ஊழல் வழக்குகள் தற்போது CBI விசாரணையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காரணமாக ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மாநிலத்தை மீட்டெடுத்து, மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவதற்காக மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அரசு முழுமையாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் பேசினார்.